கானாவிளக்கு அரசு மருத்துவமனையில் அவலம்: திறந்தவெளியில் மருத்துவக் கழிவுகள், துர்நாற்றத்தில் தவிக்கும் மாணவர்கள்

image 473

தேனி: தேனி மாவட்டம் கானாவிளக்கு பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், முறையான பராமரிப்பின்றி குப்பை மேடாக மாறி வருவது பொதுமக்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளாகத்திற்குள்ளேயே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது

இந்த மருத்துவமனைக்கு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் வந்து செல்கின்றனர். தென் மாவட்டங்களின் முக்கிய மருத்துவ மையங்களில் ஒன்றாக விளங்கும் இந்த வளாகத்தில், மருத்துவக் கல்லூரி மற்றும் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகளும் அமைந்துள்ளன.

also read : ஆ. ராசா மீது வழக்கு பதிவு செய்ய கோரி மயிலாடுதுறை எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு

மருத்துவமனை வளாகத்தைத் தூய்மையாகப் பராமரிக்கும் பணி தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் தினசரி குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால், சேகரிக்கப்படும் குப்பைகளை வளாகத்திற்கு வெளியே கொண்டு சென்று பாதுகாப்பாக அழிப்பதற்குப் பதிலாக அவர்கள் மருத்துவக் கல்லூரி விடுதிக்கு மிக அருகிலேயே கொட்டி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதனால் விடுதிப் பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கே கஷ்டமான சூழல் உருவாகி உள்ளதாக விடுதி மாணவர்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், திறந்தவெளியில் கொட்டப்படும் இந்தக் கழிவுகளால் கொசுக்கள் மற்றும் ஈக்களின் உற்பத்திக் கூடமாக இப்பகுதி மாறியுள்ளது.

சாதாரணக் குப்பைகளுடன் சேர்த்து மருத்துவக் கழிவுகளும் அங்கே கொட்டப்படுவதால் காற்றில் நச்சுத்தன்மை பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நோயைக் குணப்படுத்த வரும் மக்கள் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதிய தொற்றுநோய்களுக்கு ஆளாகும் சூழல் நிலவுவதாகச் சுட்டிக்காட்டுகின்றனர். வளாகத்தின் உட்பகுதிகள் குப்பை மேடு போலக் காட்சியளிப்பது மாவட்டத்தின் முதன்மை மருத்துவமனையின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுவதாகப் பொதுமக்கள் அதிருப்தியுடன் தெரிவித்துள்ளனர்.

தனியார் ஒப்பந்த நிறுவனம் தனது லாப நோக்கத்தை மட்டுமே பிரதானமாகக் கொள்ளாமல், ஒப்பந்த விதிகளின்படி மருத்துவக் கழிவுகளையும் இதர குப்பைகளையும் உடனுக்குடன் அகற்றி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட நிர்வாகமும் மருத்துவக் கல்லூரி இயக்குநரகமும் உடனடியாகத் தலையிட்டு இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனச் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1177

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »