புது தில்லி ,ஜூன் 18 : இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ,இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. பிரிட்டனின் புதிய உருக்கு பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் கார்பன் எல்லை வரி (CBAM) போன்ற முக்கிய சவால்களைச் சமாளித்து ,இந்திய ஏற்றுமதியாளர்களுக்குச் சாதகமான பல சலுகைகளை மத்திய அரசு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்தியாவின் உருக்கு ஏற்றுமதிப் பங்கு பாதிக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதமே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்த போதிலும் ,சில தொழில்நுட்பக் காரணங்களால் அது நடைமுறைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது நிலுவையில் இருந்த அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் சுமுகமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து ,வரும் ஜூலை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்த ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வரவுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ,பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டாமரும் இணைந்து இதற்கான இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளனர். ஜூலை 16ஆம் தேதி ,அதாவது ஒப்பந்தம் அமலுக்கு வரும் முதல் நாளன்றே இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது சரக்குகளைப் பிரிட்டனுக்கு அனுப்பத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்: ஹோர்முஸ் நீரிணை திறப்பு; கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் முதன்மை கவலையாக இருந்தது பிரிட்டனின் உருக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள்தான். ஆனால் ,தற்போதைய பேச்சுவார்த்தையின் மூலம் 188 உருக்குக் கட்டணக் குறியீடுகளில் (Steel Tariff Lines) இந்தியாவிற்குப் பிரிட்டன் அரசு கணிசமான சலுகைகளை வழங்கியுள்ளது. இதன் விளைவாக ,இந்தியாவின் ஒட்டுமொத்த உருக்கு ஏற்றுமதியில் 85 சதவீதப் பங்கிற்கு இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து முழு விலக்கு கிடைத்துள்ளது. அதேபோல் ,ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலன்றி ,பிரிட்டன் இன்னும் தனது கார்பன் வரி (CBAM) கட்டமைப்புக்கான இறுதி விதிகளை வகுக்காததால் ,தற்போதைக்கு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அதுகுறித்த எவ்வித பாதிப்பும் இல்லை என்று அரசுத் தரப்பு விளக்கியுள்ளது.
உருக்குத் துறைக்கு அடுத்தபடியாக ,இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட சேவைத் துறைக்கும் ,அங்குள்ள இந்தியப் பணியாளர்களுக்கும் இந்த ஒப்பந்தம் பெரும் சாதகமாக அமைந்துள்ளது. குறிப்பாக ,இரட்டைப் பங்களிப்பு மரபு (Double Contribution Convention) சார்ந்த விதிமுறைகளின் கால வரம்பு 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவு குறைந்து ,மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் சேவைத் துறை மற்றும் மனிதவளத் திறன் அங்கு கூடுதல் போட்டித்தன்மையைப் பெறும். தற்போது பிரிட்டனில் 9,000க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் இயங்கி வரும் சூழலில் ,சுமார் 75,000க்கும் அதிகமான இந்தியப் பணியாளர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ,இந்தியாவின் ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் போன்ற அதிக தொழிலாளர்களைக் கொண்ட பாரம்பரிய உற்பத்தித் துறைகளுக்கும் இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. இதற்கு முன்னதாக ,சில சிறிய நாடுகள் பிரிட்டன் சந்தையில் பூஜ்ஜிய வரிச் சலுகையைப் பெற்று வந்த நிலையில் ,இந்தியா 7 முதல் 8 சதவீதம் வரை கூடுதல் வரி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் ,புதிய ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் 99 சதவீத ஏற்றுமதிப் பொருட்களுக்குப் பிரிட்டனில் பூஜ்ஜிய வரி (Zero Duty) சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற நாடுகளுக்கு இணையாக இந்தியப் பொருட்களும் பிரிட்டன் சந்தையில் சரிசமமான வாய்ப்பைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் ,நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எனத் தொழிற்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.








