காஞ்சிபுரம் , ஜூன் 18: காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த திடீர் ஆய்வின் போது கணக்கில் வராத 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சப் புகார்கள் அதிகரித்த வண்ணம் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் மாநிலம் தழுவிய அளவில் முக்கிய ஆர்.டி.ஓ அலுவலகங்களில் திடீர் சோதனைகளை நடத்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை திட்டமிட்டது.
மேலூரில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு: சிங்கப்பெண் அதிரடிப்படையினர் அதிரடி ரோந்து
இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் பொன்னேரி கரையில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. நேற்று மாலை அலுவலகப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக அலுவலகத்திற்குள் நுழைந்தனர். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் இந்த திடீர் வருகையால் அலுவலக வளாகத்தில் இருந்த ஊழியர்களும் பொதுமக்களும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர்.
சோதனை தொடங்கப்பட்டவுடன் அலுவலகத்தின் முக்கிய நுழைவாயில்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன. அங்கிருந்த ஊழியர்கள் யாரும் வெளியில் செல்லவும் வெளிநபர்கள் யாரும் உள்ளே வரவும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த கோப்புகள் கணினிகள் மற்றும் ஊழியர்களின் உடமைகள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. ஓட்டுநர் உரிமம் பழகுநர் உரிமம் வாகனப் பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக இடைத்தரகர்கள் மூலம் பணம் கைமாறுவதாக வந்த தகவலின் பேரில் இந்த ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த அதிரடி சோதனையின் போது ஆர்.டி.ஓ அலுவலக ஊழியர்கள் மற்றும் அங்கு பணிகளுக்காக வந்திருந்த நபர்கள் என பத்துக்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் முறையான கணக்கில் காட்டப்படாத 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் எதற்காக கொண்டு வரப்பட்டது மற்றும் இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து அங்கிருந்தவர்களிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கலைச்செல்வன் தற்போதைய முதற்கட்ட சோதனையில் 60 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இந்த முழுமையான விசாரணை நிறைவடைந்த பிறகு மட்டுமே கைப்பற்றப்பட்ட பணத்தின் துல்லியமான மதிப்பு மற்றும் இதில் தொடர்புடைய அரசு அலுவலர்கள் இடைத்தரகர்களின் முழு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








