திருநெல்வேலி, ஜூன் 5: நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகள், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சொந்தச் செலவில் விமானம் மூலம் சென்னைக்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இப்பள்ளியின் முன்னாள் மாணவருமான சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.

செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய கல்வியாண்டு தொடக்க விழா மற்றும் பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா இன்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.மொத்தம் 932 மாணவ-மாணவிகள் பயின்று வரும் இப்பள்ளியில் அண்மையில் வெளியான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மொத்தம் 146 மாணவர்கள் தேர்வு எழுதி 99.3 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசில் ககாரின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அதிமுக முன்னாள் எம்பி சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களையும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டினார்.
தொடர்ந்து பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் முன்னாள் எம்பி சௌந்தரராஜன் தனது சொந்த நிதியிலிருந்து ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.அதன்படி முதலிடம் பிடித்த மாணவருக்கு 5,000 ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்தவருக்கு 3,000 ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்தவருக்கு 2,000 ரூபாயும் வழங்கி, கேடயங்களுடன் வாழ்த்து தெரிவித்தார்.
Also : ஜூன் 18-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது: ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது கூட்டத்தொடர்
விழாவில் சிறப்புரையாற்றிய முன்னாள் எம்பி சௌந்தரராஜன் கடந்த ஆண்டு நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 10-ஆம் வகுப்பில் 500-க்கு 491 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த முகமது ஜாஹித், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்த மாணவர்கள், அதேபோல் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 6 மாணவர்கள் என மொத்தம் 12 மாணவ-மாணவிகளையும் அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் இம்மாத இறுதியில் தனது சொந்தச் செலவில் மூன்று நாட்கள் விமானம் மூலம் சென்னைக்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாணவர்கள் விமானச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் வரும் ஆண்டுகளிலும் இந்த நடைமுறை தொடர்ந்து தொய்வின்றி நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.இந்த அறிவிப்பு விழாவில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே மிகுந்த உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
பாராட்டு விழாவின் நிறைவாக பள்ளியில் திரண்டிருந்த மாணவ-மாணவிகள் அனைவருக்கும் இனிப்புகள், குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில் நல்லாசிரியர் ஜேசு, பள்ளியின் முன்னாள் மாணவர்களான வசந்தி, ராஜம், குமரேசன், ஏசுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் பெற்றோர் கழக நிர்வாகிகள் லிங்கதுரை, குமார வேலாயுதம், சுடலைமணி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் சுடலைமணி, ராமலிங்கம், சுவாமிநாதன் மற்றும் திரளான பெற்றோர்களும், மாணவ-மாணவிகளும் கலந்துகொண்டு சாதனை மாணவர்களை வாழ்த்தினர்.








