
Chennai , May 8 : தமிழக வெற்றி கழகத்திற்கு CPI மற்றும் CPM நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த நிலையில், விஜய் ஆட்சி அமைப்பது உறுதியாகும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த பரபரப்புக்கு மத்தியில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு தற்போது மிகப்பெரிய அரசியல் முன்னேற்றம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்திருப்பது ,இதன் மூலம் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு மிக அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும். தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றி கழகத்திடம் 108 எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதனுடன் காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள் சேரும்போது இந்த எண்ணிக்கை 113 ஆக உயர்கிறது.
இதற்கிடையில் CPI மற்றும் CPM ஆகிய இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலா 2 உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பதால் மொத்த ஆதரவு 117 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இன்னும் ஒரே ஒரு உறுப்பினர் ஆதரவு கிடைத்தாலே ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை விஜய் எட்டிவிடக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
மேலும் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதால், அவர் ஒரு இடத்தை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையும் உருவாகலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தற்போது அனைவரது கவனமும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முடிவின் மீது திரும்பியுள்ளது. அக்கட்சியிடம் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், அவர்கள் அளிக்கும் ஆதரவு தமிழக அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று காலை அளித்த பேட்டியில், “இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் எங்களது முடிவும் அமையும்” என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மாலை நடைபெறும் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு விஜயின் அரசியல் பயணத்தில் மிக முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் விரைவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சந்திப்பில் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
அதனைத் தொடர்ந்து CPI மற்றும் CPM தலைவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனையும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
CPI மற்றும் CPM வெளியிட்ட முக்கிய விளக்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட கடிதத்தில், தமிழக சட்டமன்றத்தில் உள்ள தங்களது இரண்டு உறுப்பினர்களும் தமிழக வெற்றி கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், “தமிழகத்தில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும்” என்ற நோக்கத்திலும், “மத்திய BJP அரசின் சில கொள்கைகளுக்கு எதிராக செயல்பட வேண்டிய அவசியம்” இருப்பதாலும் இந்த ஆதரவை வழங்குவதாக விளக்கம் அளித்துள்ளது. இந்த அறிவிப்புகள் தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாட்டை உருவாக்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.





