
chennai , May 6 : தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய் நாளை முறைப்படி பொறுப்பேற்க உள்ள சூழலில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று உயர்மட்ட ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, காவல்துறை மற்றும் ஐஏஎஸ் (IAS) அதிகாரிகள் மட்டத்திலான இடமாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் குறித்த ஆரம்பகட்ட விவாதங்கள் தற்போதைய அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன.
நாளை காலை 11:30 மணியளவில் நடைபெறவிருக்கும் பதவியேற்பு விழாவை முன்னிட்டு, இன்று சென்னை நீலாங்கரை இல்லத்தில் விஜயை, காவல்துறை துணைத் தலைவர் (DIG) தர்மராஜன் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது என்பதைத் தாண்டி, புதிய நிர்வாகக் கட்டமைப்பு, உளவுத்துறை வலுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தான விரிவான ஆலோசனையாக இருக்கிறது .
புதியதொரு தலைமை பொறுப்பேற்கும் போது, தங்களது நிர்வாகக் கொள்கைகளுக்கு இணங்கச் செயல்படக்கூடிய, நம்பகத்தன்மை வாய்ந்த அதிகாரிகளை முக்கியப் பொறுப்புகளில் அமர்த்துவது தார்மீக நடைமுறையாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் இந்த ஆரம்பகட்ட நகர்வுகளைத் தீர்மானிப்பதில் உளவுத்துறை (Intelligence) மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரிவுகளே முதன்மையான கவனத்தைப் பெற்றுள்ளன.
இந்த சூழலில், டிஐஜி தர்மராஜன் விரைவில் உளவுத்துறையின் மிக முக்கியப் பொறுப்பான ‘இண்டெலிஜென்ஸ் ஐஜி’ (Intelligence IG) ஆக தரம் உயர்த்தப்பட்டு நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் கோட்டை வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகின்றன. ஏற்கனவே சென்னை காவல்துறையில் இணை ஆணையராகவும் (Joint Commissioner), உளவுத்துறையின் பல்வேறு முக்கியப் பிரிவுகளிலும் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர் தர்மராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் மண்டலத்திற்கு மாற்றப்பட்டிருந்த அவர், தற்போது சென்னைக்கு வரவழைக்கப்பட்டு இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக, நேற்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டம் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இக்கூட்டத்தில், நிர்வாகப் சக்கரத்தைச் சுழற்றக்கூடிய ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறையின் உயர் அதிகாரிகள் மட்டுமன்றி, அமைச்சர்களுக்கான அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் (PRO) வரை யாரையெல்லாம் நியமிக்கலாம் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.
நிர்வாகப் பட்டியல்கள் ஒருபுறமிருக்க, பதவியேற்பு விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் குறித்தான முழுமையான திட்டவரைவை டிஐஜி தர்மராஜன், விஜய் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளார். மேலும், விழா நடைபெறவுள்ள மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்புத் தன்மைகளை அவர் நேரில் சென்று ஆய்வு செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .
மறுபுறம், பதவியேற்பு விழாவிற்கான முறைப்படியான அனுமதிகள் ஆளுநரிடம் கோரப்பட்டுள்ளன. நாளை பிற்பகலில் சென்னை திரும்பும் ஆளுநரை, மதியம் 3:00 மணி முதல் 3:30 மணிக்குள் விஜய் நேரில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பிற்குப் பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வரை எந்தெந்த அதிகாரிகள், எந்தெந்தத் துறைகளுக்கு மாற்றப்படவுள்ளார்கள் என்ற இறுதிப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக கசியவிடப்படவில்லை. நிர்வாக ரீதியிலான சில பெயர்கள் பரிசீலனையில் இருந்தாலும், இறுதி முடிவுகள் அனைத்தும் கட்சியின் மிக உயர்மட்டக் குழுவின் ஒப்புதலுக்காக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.





