மருத்தவ தொகுப்பு , ஏப்ரல் 15 : உலகளவில் வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் சுமார் 180 கோடி மக்கள் வளர்சிதை மாற்றக் குறைபாடுகளுடன் தொடர்புடைய கல்லீரல் நோயால் (MASLD) பாதிக்கப்படக்கூடும் என்று சர்வதேச புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. த லான்செட் கேஸ்ட்ரோஎன்டாலஜி அண்ட் ஹெபடாலஜி (The Lancet Gastroenterology and Hepatology) மருத்துவ இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி உலக மக்கள் தொகையில் சுமார் 130 கோடி பேர் இந்த கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. இது கடந்த முப்பது ஆண்டுகளில் 143 சதவீத உயர்வாகும்.
முன்னர் இந்த பாதிப்பானது ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய் (Non-Alcoholic Fatty Liver Disease) என்று அழைக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த நோய் வளர்சிதை மாற்றக் காரணிகளுடன் (Metabolic factors) நேரடியாகத் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளதால் இது மெட்டபாலிக் டிஸ்ஃபங்க்ஷன் அசோசியேட்டட் ஸ்டீட்டோடிக் லிவர் டிசீஸ் (MASLD) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உயர் இரத்த சர்க்கரை அளவு, அதிக உடல் எடை, போதிய உடற்பயிற்சியின்மை மற்றும் புகைபிடித்தல் ஆகியவை இந்த கல்லீரல் நோய் ஏற்படுவதற்கான முதன்மைக் காரணங்களாக மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் சிக்கல் உள்ளவர்களிடம் இந்த பாதிப்பு மிக நேரடியாகக் காணப்படுகிறது.
also : ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட “மினி மூளை” உணர்வு பெறுமா? வலி உணருமா? விஞ்ஞான உலகில் புதிய விவாதம்
கடந்த 1990 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 50 கோடியாக இருந்த இந்த நோயாளிகளின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டிற்குள் 130 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் இந்த பாதிப்பு மேலும் 42 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.
பாலின அடிப்படையில் பார்க்கும்போது பெண்களை விட ஆண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக முதியவர்களிடம் அதிகம் காணப்படும் இந்த பாதிப்பு தற்போது இளைஞர்களிடையேயும் வேகமாக அதிகரித்து வருவது மருத்துவ உலகைக் கவலைகொள்ளச் செய்துள்ளது. குறிப்பாக 35 முதல் 39 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் 55 முதல் 59 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த நோய்ப் பாதிப்புக்குள்ளாகும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
இந்த கல்லீரல் நோயின் மிக முக்கிய ஆபத்து என்னவென்றால் இது ஆரம்பக் கட்டத்தில் எந்தவிதமான வெளிப்படையான அறிகுறிகளையும் காட்டுவதில்லை. இதனால் தங்களுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருப்பதே தெரியாமல் பெரும்பாலான மக்கள் அன்றாடப் பணிகளைத் தொடர்கின்றனர்.
தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் சமீபகாலமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையும் உடல் பருமன் பிரச்சினையும் தீவிரமாக அதிகரித்து வருவது இந்த கல்லீரல் நோய் மேலும் பரவுவதற்கான சூழலை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள நவீன வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக இத்தகைய வளர்சிதை மாற்ற நோய்கள் பெருகுவதாக சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் நிலவும் உட்கார்ந்தபடியே பணியாற்றும் சுபாவம், பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளின் (Junk food) அதிகப்படியான பயன்பாடு மற்றும் மன அழுத்தம் ஆகியவை இந்த கல்லீரல் நோய் பாதிப்பை பல மடங்கு உயர்த்துகின்றன.
இந்த நோய் குறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது ஆரம்ப நிலையிலேயே இதனைத் துல்லியமாகக் கண்டறிந்துவிட்டால் முறையான வாழ்வியல் மாற்றங்கள் மூலமாகவே முழுமையாகக் கட்டுப்படுத்திவிட முடியும் என்கின்றனர். ஆனால் இதனை அலட்சியப்படுத்தும் பட்சத்தில் கல்லீரல் சுருக்கம் (Cirrhosis) மற்றும் கல்லீரல் புற்றுநோய் (Liver cancer) போன்ற உயிருக்கே ஆபத்தான கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர்.
தற்போது சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவத் தொழில்நுட்பங்கள் மேம்பட்டுள்ளதால் இந்த நோயினால் ஏற்படும் உடனடி மரணங்கள் அல்லது தீவிரப் பாதிப்புகள் ஓரளவு குறைந்துள்ளன. இருப்பினும் நோயாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருவதால் எதிர்காலத்தில் இது பொதுச் சுகாதாரக் கட்டமைப்பிற்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கும் என்று இந்த சர்வதேச ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
தினசரி உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்வது, முறையான ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவது, உடல் எடையை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, புகைபிடிக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பது மற்றும் சீரான இடைவெளியில் சர்க்கரை நோய் பரிசோதனைகளை மேற்கொள்வது ஆகியவற்றைச் சுகாதார நிபுணர்கள் தற்போதைய சூழலில் அவசியமான வழிகாட்டுதல்களாகப் பரிந்துரைக்கின்றனர்.





