புதுக்கோட்டை , ஜூன் 30 : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி உட்கட்சி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் உட்பட 1,170 நிர்வாகிகள் கட்சியில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளராகவும் களம் கண்டவர் பி.கே. வைரமுத்து. மாவட்ட அளவில் வலுவான செல்வாக்குக் கொண்ட இவருடைய கட்சிப் பதவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அதிரடியாகப் பறித்தார். அவருக்குப் பதிலாக முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவரான ராமு என்பவரைப் புதிய தெற்கு மாவட்டச் செயலாளராகத் தலைமை அறிவித்தது.
அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுக்க தடை: தமிழக அரசு அதிரடி உத்தரவு
பள்ளி அங்கீகார மோசடி: ரூ.200 கோடியைத் தாண்டும் திடுக்கிடும் பின்னணி
தலைமையின் இந்த அதிரடி மாற்றமும் புதிய மாவட்டச் செயலாளராக ராமு நியமிக்கப்பட்டதும் உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் தொடக்கம் முதலே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. எடப்பாடி பழனிசாமியின் இந்தத் தனிச்சச்சையான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் புதிய மாவட்டச் செயலாளர் ராமுவுடன் இணைந்து பணியாற்ற முடியாது எனக் கூறியும் தெற்கு மாவட்ட அதிமுகவினர் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யத் தொடங்கினர்.
இந்த உட்கட்சிப் பூசலின் உச்சகட்டமாக தற்போது முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.கே. வைரமுத்து தலைமையில் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 1,170 நிர்வாகிகள் தங்களது பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் கூண்டோடு விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த ஒட்டுமொத்த விலகலில் பி.கே. வைரமுத்துவுடன் சேர்த்து அதிமுகவின் மூன்று மாநிலப் பொறுப்பாளர்கள் மாவட்ட அளவிலான முக்கியப் பொறுப்பாளர்கள் 9 பேர் மற்றும் தலைமைக் கழகப் பேச்சாளர் ஒருவர் ஆகியோர் அடங்குவர். மேலும் உள்ளூர் அளவில் கட்சியின் அடித்தளமாக விளங்கும் ஒன்றியச் செயலாளர்கள் இருவர் ஒரு நகரச் செயலாளர் மற்றும் 214 கிளைச் செயலாளர்கள் எனப் பெரும் பட்டாளமே கட்சியை விட்டு வெளியேறியுள்ளது.
ஒரே கட்டமாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்கள் அதிமுகவிலிருந்து விலகியிருப்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சியின் கட்டமைப்பைக் கடுமையாகப் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தென் மாவட்ட உட்கட்சிப் பூசல்களைச் சரி செய்யத் தலைமை தவறியதே இந்த மிகப்பெரிய பிளவுக்குக் காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.கே. வைரமுத்துவின் இந்த அடுத்தகட்ட அதிரடி நகர்வு புதுக்கோட்டை மாவட்ட அதிமுக தலைமைக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த மாநிலத் தலைமைக்கும் ஒரு கடுமையான சவாலாக உருவெடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.





