ஆந்திரா , ஜூன் 22: ஆந்திர மாநிலம் கோணசீமா மாவட்டத்தில் கடுமையான வறட்சியைப் போக்கி மழை பெய்ய வேண்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து இரண்டு தவளைகளுக்கு தங்கத் தாலியுடன் தடபுடலாகத் திருமணம் செய்து வைத்துள்ள விசித்திர நிகழ்வு நாடு முழுவதும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

கோணசீமா மாவட்டத்தின் பாண்டா கிராமத்தில் நடப்பு கோடைகாலத்தில் வழக்கமாகப் பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர் மட்டம் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. குடிநீர்ப் பற்றாக்குறை ஒருபுறம் வாட்ட மறுபுறம் விவசாயப் பணிகளும் முற்றிலும் முடங்கியதால் ஒட்டுமொத்த கிராமமும் வறுமையின் பிடியில் சிக்கியது. மழையின்றி தவித்த மக்கள் இந்தத் துயரத்திற்குத் தீர்வுகாண கிராமத்துப் பெரியவர்களிடம் ஆலோசித்துள்ளனர். அப்போது மழை பெய்யாமல் வறட்சி நீடிக்கும் காலங்களில் வாய் பேச முடியாத ஜீவன்களான தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தால் வருண பகவான் குளிர்ந்து மழையை அள்ளித் தருவார் என்ற முன்னோர்களின் பாரம்பரிய நம்பிக்கை குறித்துப் பெரியவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
இதனையடுத்து கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மழையை வரவழைப்பதற்கான பாரம்பரிய சடங்குகளைத் தொடங்கினர். இதற்காகக் கிராமத்தில் இருந்து இரண்டு ஆரோக்கியமான பெரிய தவளைகள் பிடிக்கப்பட்டு அவற்றுக்கு முறைப்படி மஞ்சள் பூசி, பொட்டிட்டு மணமகன் மற்றும் மணமகள் போல அலங்காரம் செய்யப்பட்டது. இத்தனை காலம் சாதாரணமாகக் கடந்து சென்ற தவளைகளுக்கு ஒரு திருமண வீட்டின் முறைப்படியான அனைத்து சடங்குகளும் அரங்கேற்றப்பட்டன.
வழக்கமான மனித திருமணங்களை விஞ்சும் அளவிற்கு மங்கள இசை மற்றும் மேளதாளங்கள் முழங்க ஒட்டுமொத்த ஊர் மக்கள் முன்னிலையில் இந்தத் தவளைத் திருமணம் விமரிசையாக நடைபெற்றது. தற்போதைய தங்கம் விலை உயர்விலும் மழை வர வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக அந்தத் தவளைகளுக்குத் தங்கத்தினால் ஆன தாலி செய்யப்பட்டு சடங்குகள் முறைப்படி கட்டி வைக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதிகளான அந்தத் தவளைகளைப் பல்லக்கில் வைத்து கிராம மக்கள் வீதி வீதியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று தங்களின் வேண்டுதலை வெளிப்படுத்தினர்.





