திருப்பூர் , ஜூன் 18 : திருப்பூர் அருகே உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் நீராவி இஸ்திரி செய்யும் பிரிவின் கம்ப்ரஸர் திடீரென வெடித்துச் சிதறிய விபத்தில் , பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளம் எலக்ட்ரீசியன் சம்பவ இடத்திலேயே தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (35). இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த நியூ திருப்பூர் நேதாஜி அப்பேரல் பார்க் மையத்தில் செயல்பட்டு வரும் ‘இ-லேண்ட்’ என்ற தனியார் பின்னலாடை நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாகப் பணியாற்றி வந்தார்..
வழக்கம்போல் இன்று காலை நிறுவனத்தில் உற்பத்திப் பணிகள் சுறுசுறுப்பாகத் தொடங்கிய போது துணிகளை இஸ்திரி செய்யும் பிரிவில் (Ironing Section) உள்ள ஸ்டீம் அயர்ன் எனப்படும் நீராவி இஸ்திரி அமைப்பில் திடீரென வாயு அல்லது நீராவி கசிவு (Leakage) ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து தொழில்நுட்பப் பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு , பழுதைச் சரிசெய்யும் பணி எலக்ட்ரீசியன் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
also : கோவில்பட்டி அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை, மகள் பலி
தொழில்நுட்பக் கோளாறை நீக்குவதற்காகச் செல்வம் அந்த நீராவி இஸ்திரி பிரிவுக்குச் சென்று கசிவு ஏற்படும் இடத்தை ஆராய்ந்து பழுதுபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மிக பயங்கர சத்தத்துடன் அங்கிருந்த ஸ்டீம் கம்ப்ரஸர் (Steam Compressor) திடீரென வெடித்துச் சிதறியது. கம்ப்ரஸர் வெடித்த வேகம் மற்றும் அதன் இரும்புத் துகள்கள் பாய்ந்ததில் அருகில் நின்று வேலை செய்துகொண்டிருந்த செல்வத்தின் தலையின் ஒரு பகுதி சிதைந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் , ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
பயங்கர வெடி சத்தம் கேட்டு தொழிற்சாலையின் மற்ற பிரிவுகளில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியடித்தபடி அயர்னிங் பகுதிக்கு ஓடி வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் செல்வம் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகத்தினர் , உடனடியாக இதுகுறித்து அவிநாசி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த அவிநாசி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்தனர். தொடர்ந்து செல்வத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக அவிநாசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கம்ப்ரஸர் வெடித்ததற்கான உண்மையான காரணம் என்ன ? பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா? என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






