நெல்லை , ஜூன் 13 : நெல்லை தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டியைச் சேர்ந்த 35 வயது பெண் சசுமாலா என்பவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு மற்றும் அவரது குடும்பத்தினரின் உன்னதமான முடிவால் ஐந்து நபர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

ராமையன்பட்டி பகுதியில் உள்ள தேநீர்க்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த சசுமாலாவுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எனினும் மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் அவர் உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
Also : மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: எம்எல்ஏ மீது நெல்லை டிஐஜியிடம் பெண் புகார்
மருத்துவமனையில் சசுமாலாவை பரிசோதித்த தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் அவருக்கு மூளையில் கடுமையான ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும் அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் நிலைமை மிகவும் மோசமடைந்தது. இந்த நிலையில் நேற்று அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முறைப்படி உறுதிப்படுத்தி அறிவித்தனர்.
இந்தத் துயரமான சூழலிலும் சசுமாலாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒரு உன்னதமான முடிவை எடுத்தனர். சசுமாலாவின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவர்கள் முன்வந்தனர். உறவினர்களின் இந்தச் சம்மதத்தை அடுத்து மருத்துவக் குழுவினர் அதற்கான அறுவை சிகிச்சை பணிகளைத் தொடங்கினர். சசுமாலாவின் உடலில் இருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கருவிழிகள் மற்றும் தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் வெற்றிகரமாகத் தானமாகப் பெறப்பட்டன. இந்த உறுப்புகள் அனைத்தும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் பிற நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து உடல் உறுப்பு தானம் செய்த சசுமாலாவின் உடலுக்கு அரசு சார்பில் உரிய மரியாதை செலுத்தும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று பிற்பகல் அவரது உடல் அரசு மரியாதையுடன் உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. சோகத்திலும் பிறர் நலம் காக்க முடிவெடுத்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை மருத்துவமனை நிர்வாகத்தினரும் பொதுமக்களும் நெகிழ்ச்சியோடு பாராட்டினர்.







