சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு: ஐடி ஊழியர் கைது, எப்.ஐ.ஆர் விவரங்கள் வெளியீடு
சென்னை,ஜூன் 4: சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (டான்ஜெட்கோ) தலைமை அலுவலகத்தில் கணினி ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் முக்கிய அரசு ஆவணங்கள் மாயமானது தொடர்பாக சிந்தாதரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தகவல் தொழில்நுட்ப ஊழியர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தின் 5-வது தளத்தில் நீர்மின் பிரிவு இயங்கி வருகிறது.இப்பிரிவில் உதவி செயற்பொறியாளராக மலர்விழி என்பவர் பணியாற்றி வருகிறார்.இவர் பயன்படுத்தி வந்த அலுவலக கணினியில் இருந்த ‘டி டிரைவ்’ (D Drive) மற்றும் அதிலிருந்த கோப்புகள் அனைத்தும் கடந்த மே மாதம் 16 ஆம் தேதி வரை வழக்கம்போல் இயங்கி வந்தன.இதற்கிடையே, வார விடுமுறை முடிந்து மே 18 ஆம் தேதி காலை மலர்விழி மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.அப்போது, தனது கணினியை இயக்கிய அவர், அதில் இருந்த ‘டி டிரைவ்’ மற்றும் அதிலிருந்த முக்கிய கோப்புகள் அனைத்தும் காணாமல் போயிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து மின்வாரியத்தின் கணினி பராமரிப்பு பிரிவுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் மலர்விழி உடனடியாகப் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில், மின்வாரிய அலுவலகத்திற்கு வந்து கணினியை ஆய்வு செய்த தகவல் தொழில்நுட்ப ஊழியரான கோபிநாத் என்பவர், கணினியில் இருந்த ஹார்ட் டிஸ்க் முற்றிலும் அகற்றப்பட்டு, காணாமல் போயிருப்பதை உறுதி செய்தார்.
அலுவலகத்தின் மிக முக்கியமான மற்றும் ரகசியக் கோப்புகள், தரவுகள் திருடப்பட்டிருப்பது அரசு ஆவணங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்ததையடுத்து, உதவி செயற்பொறியாளர் மலர்விழி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார்.இப்புகாரின் பேரில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி சி.எஸ்.ஆர் (CSR) பதிவு செய்யப்பட்டு முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து, ஜூன் 2 ஆம் தேதி சிந்தாதிரிப்பேட்டை போலீசார் அதிகாரப்பூர்வமாக திருட்டு வழக்குப்பதிவு செய்தனர்.இந்த விவரங்கள் அனைத்தும் தற்போது வெளியாகியுள்ள முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மின்வாரிய தரப்பில் நடத்தப்பட்ட துறைரீதியான முதற்கட்ட விசாரணையில், மலர்விழியின் கணினி மட்டுமின்றி, அதே அலுவலகத்தில் பல்வேறு பிரிவுகளில் இருந்த 20-க்கும் மேற்பட்ட கணினி ஹார்ட் டிஸ்க்குகளும் திருடப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இதனால் மின்வாரிய வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், கணினியைப் பழுதுபார்க்க வந்த தகவல் தொழில்நுட்ப ஊழியரான கோபிநாத் என்பவரையே போலீசார் கைது செய்துள்ளனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து ஹார்ட் டிஸ்க்குகளைத் திருடியதை அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
இந்த ஹார்ட் டிஸ்க் திருட்டு தொடர்பாக மின்வாரிய மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் இருந்து இதுவரை அடுத்தடுத்து 8 புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்துள்ளன.கைதான கோபிநாத், மின்வாரியத்தின் முக்கியத் தரவுகள் அடங்கிய இந்த ஹார்ட் டிஸ்க்குகளை பணத்திற்காக யாரிடம் விற்பனை செய்தார், இதன் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அரசுத் தலைமை அலுவலகத்திலேயே பாதுகாப்பு வளையத்தை மீறி இந்தத் திருட்டு அரங்கேறியிருப்பது மின்வாரிய ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








