
Chennai , May 11 : நாளையும் தொடரும் விஜய்யின் அரசியல் சந்திப்புகள்.. புதிய தலைமுறைக்கு அவர் கொடுக்கும் பெரிய மெசேஜ் என்ன? முதலமைச்சர் விஜய் ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்தது தமிழக அரசியலில் புதிய நாகரிக விவாதத்தை உருவாக்கியுள்ளது.
ஸ்டாலின் முதல் வைகோ வரை தொடர்ந்த சந்திப்புகள்
முதலமைச்சர் விஜய் தனது அரசியல் பயணத்தின் ஒரு முக்கிய கட்டமாக பல்வேறு கட்சித் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்புகள் முக்கிய கவனத்தை பெற்றன.
அவரை எதிர்த்து அரசியல் களத்தில் போட்டியிட்ட தலைவர்களாக இருந்தாலும், நேரில் சந்தித்தபோது அனைவரும் இன்முகத்துடன் வரவேற்றனர். சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியது, பூங்கொத்து வழங்கியது, தேநீர் விருந்து ஏற்பாடு செய்தது போன்ற நிகழ்வுகள் அரசியல் வட்டாரத்தில் நேர்மறையான விவாதங்களை உருவாக்கியுள்ளது. அதேபோல் கடுமையான விமர்சனங்களுக்கு பெயர் பெற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜயை மரியாதையுடன் வரவேற்றது அரசியல் ஆர்வலர்களிடையே தனி கவனத்தை பெற்றுள்ளது.
Also Read : திருப்புகலூர் அக்னீசுவரசாமி ஆலயத்தில் அப்பர் ஐக்கிய திருவிழா.. பக்தர்கள் திரளாக பங்கேற்ற சுவாமி வீதியுலா
இந்த சந்திப்புகள் வெறும் அரசியல் மரியாதை நிகழ்வுகள் மட்டுமல்ல என்ற கருத்தும் உருவாகியுள்ளது. கருத்தியல் ரீதியான மோதல்கள் அரசியலில் இயல்பானவை என்றாலும், அது தனிநபர் தாக்குதலாக மாறக்கூடாது என்ற மறைமுகமான செய்தியை இந்த சந்திப்புகள் வெளிப்படுத்தியதாக பலரும் கருதுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதள அரசியல் கடுமையான தனிநபர் விமர்சனங்கள், அவதூறு கருத்துக்கள், தரக்குறைவான பதிவுகள் போன்றவற்றால் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கட்சிகளின் IT Wing ஆதரவாளர்கள் மற்றும் virtual warriors இடையே கடுமையான மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இன்றைய அரசியல் சூழலில் மிக முக்கியமான விவாதமாக மாறியுள்ளது “Political Culture” என்ற கருத்து. தலைவர்கள் ஒருவரை ஒருவர் மதித்து நடக்கும் போது, அதே அணுகுமுறையை கட்சி நிர்வாகிகள் மற்றும் அடிமட்ட தொண்டர்களும் பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கருத்தியல் அடிப்படையிலான விமர்சனங்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், அது தனிநபர் தாக்குதலாக மாறக்கூடாது என்பதே இந்த சந்திப்புகள் மூலம் வெளிப்பட்ட முக்கியமான அரசியல் செய்தியாக கருதப்படுகிறது.
அரசியல் எதிரிகள் என்றாலும் சமூக ரீதியாக ஒருவரை ஒருவர் மரியாதையுடன் அணுகும் பண்பாடு தமிழ்நாட்டில் மீண்டும் வலுப்பெற வேண்டிய அவசியம்
ஜென்சி தலைமுறை மற்றும் 2K Kids அரசியலை அணுகும் விதம் முந்தைய தலைமுறையிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது. பழைய தலைமுறையின் கடுமையான அரசியல் மோதல்களுக்கு பதிலாக, கருத்து மோதல்களை மட்டுமே மையப்படுத்தும் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை இளம் தலைமுறை எதிர்பார்க்கிறது.
நாளையும் தொடரும் அரசியல் சந்திப்புகள்
இன்றைய சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளையும் இந்த அரசியல் சந்திப்புகள் தொடரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அசோக் நகர் அலுவலகத்தில் தலைவர் தொல்.திருமாவளவனை விஜய் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சில முக்கிய அரசியல் தலைவர்களுடனும் சந்திப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.








