
கோவை , ஏப்ரல் 3 : கோயம்புத்தூர் அருகே புகழ்பெற்ற ஆன்மீக மற்றும் மலையேற்ற தளமான வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ,மலையேற்றத்தின் போது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முகேஷ் குமார் (23) என்ற வாலிபர் ,கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மருந்தியல் (D.Pharm) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நடப்பு கோடைக்கால மலையேற்றப் பருவத்தை ஒட்டி ,முகேஷ் குமார் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்கென கோவையின் தெலுங்குபாளையம் பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த மாணவர்கள் குழு ,பூண்டி அடிவாரப் பகுதியில் இருந்து தங்களது மலையேற்றப் பயணத்தைத் தொடங்கி உள்ளனர் .
TO read : ஈரான் எச்சரிக்கை: “Bridgeக்கு Bridge” – அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி பட்டியல் வெளியீடு
வெள்ளியங்கிரி மலையின் அடர்ந்த வனம் மற்றும் செங்குத்தான மலைப்பாதைகளைக் கடந்து ,ஐந்தாவது மலையை அவர்கள் எட்டியபோது எதிர்பாராத அசம்பாவிதம் நிகழ்ந்தது. கடுமையான ஏறுமுகப் பாதையில் நடந்து கொண்டிருந்த முகேஷ் குமாருக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த அவர் ,அடுத்த சில நிமிடங்களில் நண்பர்களின் கண் முன்னாலேயே சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார். அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் உடனடியாக முதலுதவி வழங்க முடியாத சூழலில் ,பதற்றமடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக மலையிலிருந்து கீழே இறங்கி வந்து அங்கிருந்த வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் அவசர அவசரமாக ஐந்தாவது மலைக்கு விரைந்து சென்றனர். மயக்க நிலையில் இருந்த முகேஷ் குமாரை ஸ்ட்ரெச்சரில் கிடத்தி ,மிகக் கடினமான மலைப்பாத வழியே சுமந்து கொண்டு அடிவாரத்திற்கு வந்தனர். அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் முகேஷ் குமாரைப் பரிசோதித்த போது ,அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
இந்த துயரச் சம்பவம் குறித்து ஆலந்துறை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ,மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ,இந்த மரணம் குறித்து ஆலந்துறை போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்து ,அவருடன் வந்த நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாக அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை ,ஆன்மீக ரீதியாக “தெற்கு கயிலாயம்” என்று போற்றப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் உள்ள இந்த ஏழு மலைகளையும் கடந்து ,சுயம்பு லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் இங்கு வருகை தருகின்றனர். குறிப்பாக தென் தமிழ்நாட்டின் திருநெல்வேலி ,தூத்துக்குடி ,தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பெருமளவிலான பக்தர்கள் வெள்ளியங்கிரி நோக்கி வருவது வழக்கம் என்பதால் ,இந்த மாணவனின் மரணச் செய்தி அந்தப் பகுதி பக்தர்களிடையேயும் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.








