
சென்னை, ஏப்ரல் 29 : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள சூழலில் , திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான செந்தில் பாலாஜி இந்தத் தேர்தலில் தனது வாக்கினைப் பதிவு செய்யாத விவகாரம் , ஒரு மக்கள் பிரதிநிதியே ஏன் ஓட்டுப் போடவில்லை என்ற விமர்சனங்கள் தீவிரமடைந்ததை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள காரணங்களை விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.
வாக்குப்பதிவு நாளன்று பிற்பகலில் இருந்தே இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய செந்தில் பாலாஜி தமக்கு வாக்களிக்கும் எண்ணம் முழுமையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். திட்டமிட்டபடி பிற்பகல் மூன்று மணியளவில் தனது வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்ததாகக் கூறிய அவர் கடைசி நேரத்தில் தொகுதிக்குள் உருவான எதிர்பாராத சூழலால் தனது முடிவை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். தேர்தல் நாளின் இறுதி மணித்துளிகளில் வாக்குப்பதிவு விகிதத்தை உயர்த்தவும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் களத்தில் நிற்க வேண்டிய தேவை இருந்ததாக அவர் தரப்பில் வாதிடப்படுகிறது.
Also : EVM-ல் BJP சின்னம் டேப்பால் மறைக்கப்பட்டதா? மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்தச் சூழலில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் செந்தில் பாலாஜி முன்வைத்துள்ளார். சில குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளுக்குள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்ததாகவும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் (Agents) அல்லாத வெளிநபர்கள் பல இடங்களை ஆக்கிரமித்திருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதுகுறித்து தங்களது கட்சியின் முகவர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் உடனுக்குடன் சுட்டிக்காட்டியும் கூட பல வாக்குச்சாவடிகளில் உடனடி நடவடிக்கைகள் எடுப்பதில் கடுமையான நிர்வாகச் சிக்கல்களும் சிரமங்களும் நிலவியதாக அவர் அதிருப்தி வெளியிட்டார்.
வாக்குப்பதிவின் இறுதி இரண்டு மணி நேரத்தில் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பரபரப்பும் பதற்றமும் நிலவியதாகக் குறிப்பிட்ட அவர் அந்தச் சலசலப்பான சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதே தனது முதல் பணியாக அமைந்தது என்றார். ஒரு தனிநபராக வரிசையில் நின்று வாக்களிப்பதை விடவும் ஒட்டுமொத்த தொகுதியிலும் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிவதை உறுதி செய்வதே ஒரு பொறுப்பான தலைவராக தனது முதன்மைக் கடமையாகக் கருதினேன எனத் தெரிவித்தார்.







