
ஈரோடு , மே 19 : ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், 25 நாட்களுக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரை அந்தியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டியதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மகளின் மரணத்திற்கு நீதி கேட்டுப் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்த அடுத்த நாளே இக்கைது நடவடிக்கை அரங்கேறியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் – மணிமேகலை தம்பதியினரின் மூத்த மகள், அப்பகுதியில் உள்ள பள்ளியொன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கழிவறைக்குச் சென்ற மாணவி, சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
மாணவியின் திடீர் மரணம் குறித்து அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் வாயிலாக மாணவிக்கு ஏற்பட்ட தொடர் தொந்தரவுகளும், மிரட்டல்களுமே அவர் இந்த விபரீத முடிவை எடுக்கக் காரணம் என்பது தெரியவந்தது.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் (19) என்ற இளைஞர், மாணவியின் புகைப்படங்களைப் பயன்படுத்தி அவரைத் தொடர்ந்து மிரட்டி, மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
also read : 2026 தேர்தல்: Instagram அரசியலா? திமுக விமர்சனம் | திமுகவிற்கே தனி IT Wing – அரசியல் பகுப்பாய்வாளர்கள்
இருப்பினும், சம்பவம் நடந்து 25 நாட்களைக் கடந்தும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவியின் பெற்றோர் வேதனை தெரிவித்து வந்தனர்.போலீசாரின் இந்தத் தாமதப் போக்கைக் கண்டித்தும், தங்களது மகளின் மரணத்திற்கு உடனடி நீதி கோரியும் பெற்றோர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளித்தனர்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தங்களது மகளின் புகைப்படத்தை ஏந்தி பெற்றோர் கதறி அழுத காட்சி அங்கிருந்தோரை உலுக்கியது.தங்களது புகார் மீது போலீசார் மெத்தனம் காட்டுவதாகவும், குற்றவாளியைக் கைது செய்யத் தாமதிப்பதாகவும் அவர்கள் கண்ணீருடன் குற்றம் சாட்டினர்.இச்சம்பவம் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி, பொதுமக்களிடையே பெரும் விவாதத்தையும் போலீசாருக்கு எதிரான அழுத்தத்தையும் உருவாக்கியது.
பெற்றோரின் இந்தத் போராட்டத்தைத் தொடர்ந்து, வழக்கை தீவிரப்படுத்திய அந்தியூர் போலீசார், உளுந்தூர்பேட்டையில் தலைமறைவாக இருந்த சதீஷைக் கைது செய்தனர்.தனிப்பட்ட புகைப்படங்களை துஷ்பிரயோகம் செய்தது மற்றும் தற்கொலைக்குத் தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.அவரிடம் இந்தச் சம்பவத்தின் முழு பின்னணி குறித்தும், வேறு யாருக்கேனும் இதில் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
.








