
கோவை May 23: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 24 மணி நேரத்திற்குள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்த பின்னணியையும், காவல்துறையின் துரித நடவடிக்கைகளையும் மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி செய்தியாளர்களிடம் விரிவாக விளக்கினார்.
கோவை சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லப்பாளையம், பாரதிபுரம் அருணகிரிநாதர் வீதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 21-ஆம் தேதி மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அச்சிறுமி திடீரென மாயமானார். குழந்தையைக் காணாமல் பதறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் உடனடியாக காவல் அவசர உதவி எண் 100-க்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே சூலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து, அன்றைய தினமே இரவு சுமார் 10 மணியளவில் குழந்தை மாயமானது தொடர்பாக முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.
கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நேரடி மேற்பார்வையில், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிறுமி காணாமல் போன பகுதியிலும், அதன் சுற்றியுள்ள இடங்களிலும் இருந்த 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளைத் தனிப்படையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். மேலும், தொழில்நுட்பப் பகுப்பாய்வு மற்றும் செல்போன் சமிக்ஞை (Tower Dump) ஆதாரங்களையும் சேகரித்தனர்.
இந்த விரிவான விசாரணையில், சிறுமியின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான, அண்டை வீட்டில் வசித்து வந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த காசிநாதன் மகன் கார்த்தி (33) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கார்த்தி அச்சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது உறுதியானது.இதனைத் தொடர்ந்து கார்த்தியைப் பிடிக்க தனிப்படையினர் அதிரடி வேட்டையில் இறங்கினர். அவர் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ‘மரியா ரோஸ் கார்டன்’ அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அந்த வீட்டைச் சுற்றி வளைத்தனர்.
போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற கார்த்தி, அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது வலது கை மற்றும் காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. நகர முடியாமல் கிடந்த அவரை போலீசார் உடனடியாகக் கைது செய்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கைது செய்யப்பட்ட கார்த்தியிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்தன. சிறுமிக்குத் தெரிந்தவர் என்பதால், விளையாட்டுத்தனமாக இருந்த குழந்தையிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள ஒரு தென்னந்தோப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அச்சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், சிறுமி இக்கொடூரம் குறித்து வெளியில் சொல்லிவிடுவாள் என்ற பயத்தில், அவளை அங்கேயே கொடூரமாகக் கொலை செய்து உடலை மறைத்து வைத்ததாக கார்த்தி காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார்.
மேலும், இக்குற்றத்திற்குத் துணையாக இருந்ததாகவும், குற்றவாளி தப்பிக்க உதவியதாகவும் பாரதிபுரம் பள்ளப்பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் மோகன் (30) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சிறுமி மாயமானது குறித்து தகவல் கிடைத்தவுடனேயே காவல்துறை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக வழக்குப்பதிவு செய்து களத்தில் இறங்கியது. இரவு முழுவதுமாக 5 தனிப்படைகள் அயராது உழைத்து, சிசிடிவி காட்சிகளைத் துல்லியமாக ஆய்வு செய்ததால் முக்கிய தடயங்கள் உடனே கிடைத்தன. இதன் காரணமாகவே, சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், கைதானவர்கள் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பேசிய ஐ.ஜி. பவானீஸ்வரி, சட்ட விதிகளின்படி பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தையோ, புகைப்படத்தையோ அல்லது அவரது குடும்ப விபரங்களையோ ஊடகங்களும், சமூக வலைதளப் பக்கங்களும் எக்காரணம் கொண்டும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் உரிய நிவாரண உதவித்தொகை விரைவாகக் கிடைப்பதற்கான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் காவல்துறை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.














