சிவகங்கையில் கடந்த சில நாட்களாகக் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் மாவட்டக் காவல்துறை சார்பில் ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ (Operation Shieldnet) என்ற பெயரில் ஒரு விரிவான சிறப்புத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.\

மே 20-ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில், பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய 27 தொடர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 512 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டது. இதன்படி, கடந்த சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய சந்திப்புகள், எல்லைப் பகுதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனைகளும், இரவு நேர ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் மற்றும் சந்தேகத்திற்குரியவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. காவல்துறையின் வசம் உள்ள தரவுகளின் அடிப்படையில், மாவட்டத்தில் ‘சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள்’ (History Sheeters) என வகைப்படுத்தப்பட்டுள்ள 694 நபர்கள் உட்பட, மொத்தம் 823 சந்தேக நபர்களிடம் போலீஸார் நேரடியாகச் சென்று சோதனைகளையும் விசாரணைகளையும் நடத்தினர்.
காவல்துறையினரின் இந்தத் தொடர் சோதனையின் விளைவாக, பல்வேறு வழக்குகளில் நீண்ட காலமாக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்த 25 பிடியாணை உத்தரவுகள் (Warrants) உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்குப் பாதிப்பைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 27 நபர்களுக்கு எதிராக பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 126-ன் கீழ் சட்டப்பூர்வ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி, ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் நீதிமன்றப் பிணையில் (Bail) வெளியில் வந்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 28 நபர்களின் ஜாமீனை ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வமான பூர்வாங்க நடவடிக்கைகளையும் சிவகங்கை மாவட்டக் காவல்துறை தற்போது தொடங்கியுள்ளது.
512 வாகனங்கள் பறிமுதல்
குற்றத் தடுப்பு நடவடிக்கைகளின் மற்றொரு முக்கியப் பகுதியாக, மாவட்டத்தின் முக்கியச் சாலைகளில் காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் சமூக விரோதிகளால் பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டன.
இந்தச் சோதனையின் போது, மோட்டார் வாகனச் சட்டங்களை முழுமையாக மீறி, எவ்வித பதிவு எண்களும் (Number Plates) இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள், அதிவேகமாகவும் விதிமீறல் முறையிலும் ஓட்டப்பட்ட வாகனங்கள் மற்றும் சைலன்சர்களை மாற்றி அமைப்பது போன்ற சட்டவிரோத மாற்றங்கள் (Illegal Alterations) செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 512 வாகனங்கள் போலீஸாரால் கண்டறியப்பட்டு, உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களின் அமைதியான வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், குற்றமில்லாச் சூழலை உருவாக்கவும் இதுபோன்ற தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தொய்வின்றி மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிகக்கப்பட்டுள்ளது








