
பொதுமக்கள் முன்னிலையில் காதலியை நம்பி வந்த இளைஞர் வெட்டிக்கொலை: தென் மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் ஆணவ வன்முறை
கோவில்பட்டி,May 21: பெண்ணின் சுயமான வாழ்க்கைத் தேர்வையும் காதலையும் குடும்பப் பெருமிதத்தின் பெயரால் நசுக்கும் வன்முறைப் போக்கு, தமிழகத்தில் மீண்டும் ஒரு இளம் உயிரைப் பறித்திருக்கிறது. கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே 19 வயது இளைஞர் சஞ்சய் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம், தென் மாவட்டங்களில் தொடரும் ஆணவக் கலாச்சாரத்தின் கொடூர முகத்தை மறுபடியும் அம்பலப்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் சஞ்சய் (19), சென்னை கிளாம்பாக்கம் பகுதியில் சிலைகள் செய்யும் சிற்பியாக வேலை பார்த்து வந்தார். மிகவும் எளிய பின்னணியைக் கொண்ட சஞ்சயும், கழுகுமலை அருகேயுள்ள கெச்சிலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி குமார் (44) என்பவரின் மகள் கனகலெட்சுமியும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், இவர்களது காதலுக்கு சாதி தடையாக இருக்கவில்லை; மாறாகக் குடும்பப் பொருளாதார வேறுபாடே பிரதான முரணாக உருவெடுத்துள்ளது. “உன் குடும்ப நிலைமை எங்களுக்குத் தெரியும், எங்கள் பெண் உனக்குக் கேட்கிறாளா?” என்று பெண் வீட்டார் சஞ்சயின் காதலுக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். சமூகத்தில் இன்னும் ஆழமாக வேரூன்றியிருக்கும் பொருளாதார அகங்காரம், ஆணாதிக்க மனநிலை மற்றும் ஒரு பெண் தன் துணையைத் தானே தேர்ந்தெடுத்துவிடக் கூடாது என்ற பிற்போக்குத்தனமான குடும்பக் கட்டுப்பாடே இந்த எதிர்ப்பின் பின்னணியாக இருந்ததாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Also read : அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் சபாநாயகர் தனபால் பரபரப்பு பேட்டி
உண்மையில், சஞ்சய் இந்த உறவைத் தவிர்க்கவே முயன்றதாகத் தெரிகிறது. “நமக்கு இன்னும் திருமண வயது வரவில்லை, சில வருடங்கள் காத்திரு” என்று அவர் கனகலெட்சுமியிடம் கூறி காதலைத் தள்ளிப்போடவே விரும்பியுள்ளார். ஆனால், சஞ்சயின் இந்தத் தயக்கத்தாலும் மௌனத்தாலும் மனவேதனை அடைந்த அந்தப் பெண் தற்கொலை முயற்சி வரை சென்றுள்ளார். இந்த இக்கட்டான சூழலில்தான், கடந்த மே 17ஆம் தேதி இரவு கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் அந்த அதிர்ச்சிகரமான கொடூரம் அரங்கேறியுள்ளது.
சென்னையில் இருக்கும் தனது வேலைக்குத் திரும்புவதற்காக சஞ்சய், உறவினர்களான முத்துசெல்வம் மற்றும் மாதேஷுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து காத்திருந்துள்ளார். அப்போது அவரைத் தொலைபேசியில் அழைத்த கனகலெட்சுமி, “வீட்டில் நம் திருமணத்திற்குச் சம்மதித்துவிட்டார்கள், அதுபற்றிப் பேச வருகிறார்கள்” என்று கூறியுள்ளார். காதலியின் வார்த்தைகளை முழுமையாக நம்பிய சஞ்சய், பேருந்தில் ஏறாமல் அங்கேயே காத்திருக்க முடிவு செய்துள்ளார். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு அழுதுகொண்டே அங்கு வந்த சஞ்சய், “என் ஆள் வருகிறது, கொஞ்சம் காத்திருங்கள்” என்று நண்பர்களிடம் கூறியுள்ளார். அவரது முக மாற்றத்தைக் கவனித்து, ஏதோ ஆபத்து இருப்பதை உணர்ந்த நண்பர்கள், “இது சரியாகப் படவில்லை, தயவுசெய்து பேருந்தில் ஏறி வா” என்று வற்புறுத்தியுள்ளனர். ஆனால், காதலி மீதான நம்பிக்கையில் சஞ்சய் அங்கேயே தங்கிவிட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் கனகலெட்சுமியின் தந்தை குமார், சித்தப்பா மாரிமுத்து, உறவினர் சங்கரநாராயணன் மற்றும் மற்றொரு பெண் என நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து சேர்ந்தது. தொடக்கத்தில் திருமணம் குறித்துப் பேசுவது போல இயல்பாக நடித்து, சஞ்சயை வலுக்கட்டாயமாகத் தங்களோடு ஆட்டோவில் ஏறுமாறு வற்புறுத்தியுள்ளனர். அதற்கு சஞ்சய் மறுப்பு தெரிவித்த அடுத்த கணமே, அந்தப் பகுதி வன்முறைக் களமாக மாறியது. “அவனை சங்குலயே குத்தி கொல்லுங்கடா” என்று குமார் ஆவேசமாகக் கத்த, மாரிமுத்துவும் சங்கரநாராயணனும் தங்களின் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள்களை எடுத்துச் சஞ்சயைச் சரமாரியாக வெட்டத் தொடங்கினர்.
கழுத்தில் கத்தி பாய்ந்த நிலையிலும், மார்பு மற்றும் கைகளில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த சஞ்சய், உயிர் பிழைப்பதற்காகப் பேருந்து நிலையத்திற்குள் ஓடியுள்ளார். ஆனால், மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்தப் பொதுவெளியிலேயே அந்தக் கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று வெட்டியுள்ளது. “அப்பா, பேசி கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு சொல்லிட்டு இப்படி வெட்டுறது நியாயமில்லை” என்று கனகலெட்சுமி அலறிக் துடித்தும், அந்தக் கும்பலின் வெறித்தனம் அடங்கவில்லை. சஞ்சயைக் காப்பாற்றப் பாய்ந்த அவரது நண்பர்களையும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டித் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த சஞ்சயைத் தூக்கிக்கொண்டு நண்பர்கள் மருத்துவமனைக்கு விரைந்தபோது, “அண்ணே… சங்குல குத்திட்டாங்க… ரொம்ப வலிக்குது…” என்று குருதி வழிய வழிந்தபடி அவர்களின் தோள்களில் சாய்ந்து கதறிய வார்த்தைகளே அந்த இளைஞனின் இறுதி வாக்குமூலமாக மாறியுள்ளது. கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சஞ்சய் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காதலியின் தந்தை குமார், மாரிமுத்து மற்றும் சங்கரநாராயணன் ஆகியோரைக் காவல்துறை உடனடியாகக் கைது செய்துள்ளது. எனினும், இந்த வழக்கை ஒரு சாதாரண கொலை வழக்காக மட்டுமே காவல்துறை பதிவு செய்திருப்பது தற்போது கடுமையான விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது.
இதுகுறித்துச் சமூக ஆர்வலரும் ‘எவிடன்ஸ்’ அமைப்பின் இயக்குநருமான கதிர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “இது சாதி ரீதியான ஆணவக் கொலை அல்ல என்றாலும், பெண்ணின் வாழ்க்கைத் தேர்வை ஆண் ஆதிக்கமும் பொருளாதார அகங்காரமும் கட்டுப்படுத்த முயன்ற ஆணவக் கொலைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை” என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவத்தின் போது பொதுமக்களின் எதிர்வினை குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், “அங்கு நின்றிருந்தவர்களில் ஒரே ஒருவர்தான் ஓடிவந்து தடுக்க முயன்றார். மற்றவர்கள் வேடிக்கை பார்த்தனர்; சிலர் எதுவும் நடக்காதது போலக் கடந்து சென்றனர். வன்கொடுமைகளுக்கு கள்ளமௌன சாட்சிகளாகத் தமிழ்ச் சமூகம் மாறிப்போய்விட்டதா? சஞ்சயின் உடல் எரிக்கப்பட்டுவிட்டது, ஆனால் அந்த எரிந்த சாம்பலிலிருந்தே நீதிக்கான குரல் எழுகிறது” என்று சாடியுள்ளார்.












