
சென்னை, மே 19: தமிழக அரசின் நிர்வாக மையமான சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரும் காலை 10 மணிக்குள் கட்டாயமாகப் பணியிடத்தில் இருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த தொடர் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட துறைகளில் சுமார் 5,500-க்கும் அதிகமான அரசு ஊழியர்களும் ஒப்பந்தப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இங்கு வழக்கமான பணிநேரம் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடைமுறையில் உள்ளது. நடைமுறையில் உள்ள விதிகளின்படி, பணியாளர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு பணியைத் தொடங்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
ஆனால், சமீபகாலமாகப் பல ஊழியர்கள் தாமதமாகத் தலைமைச் செயலகத்திற்கு வருவதும், அதன் பிறகே பணிகளைத் தொடங்குவதும் வழக்கமாகிவிட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதன் காரணமாகவே, தற்போது “காலை 10 மணிக்கு முன்னதாகவே அலுவலகத்தில் இருக்க வேண்டும்” என்ற கண்டிப்பான உத்தரவு அதிகாரிகள் தரப்பில் வாய்மொழியாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் பின்னணியில் மற்றொரு முக்கிய காரணமும் விவாதிக்கப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தினமும் காலை 9:30 மணி முதல் 10 மணிக்குள் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து, மாலை வரை அலுவலகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். முதலமைச்சரே உரிய நேரத்திற்குள் வருவதால், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் நேரத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் அரசுப் பணிகளில் எந்தவிதமான தாமதமும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் அதிகாரிகள் நேரக் கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக சென்னை மட்டுமல்லாமல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து ரயில், பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் வரக்கூடிய பணியாளர்களும், தங்களின் பயண முறையை முன்கூட்டியே திட்டமிட்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, தலைமைச் செயலகத்தில் வருகைப் பதிவைத் துல்லியமாக்க மனிதவள மேலாண்மைத் துறை மூலமாகப் பயோமெட்ரிக் (Biometric attendance) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், காலதாமதமாக வந்தால் சம்பளப் பிடித்தம் போன்ற பிரச்சினைகள் உருவாகும் என்ற காரணத்தைக் கூறி, தலைமைச் செயலக ஊழியர் சங்கங்கள் இந்தத் திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தன. ஊழியர்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது ஒவ்வொரு துறையிலும் தனித்தனியாக வருகைப் பதிவேடு (Attendance Register) வைத்திருக்கும் பழைய நடைமுறையே தொடர்கிறது.
பணியாளர்கள் தங்களின் துறைகளில் உள்ள பதிவேட்டில் கையொப்பமிட்டு பணியைத் தொடங்கினாலும், அவர்கள் எந்த நேரத்தில் அலுவலகத்திற்கு வருகிறார்கள், உண்மையில் எப்போது பணியைத் தொடங்குகிறார்கள் என்பதைக் கண்காணிப்பதில் சிக்கல் நீடித்தது. இந்தக் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே தற்போது புதிய வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு இந்த உத்தரவு வாய்மொழியாக மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், வரும் நாட்களில் தலைமைச் செயலாளர் முதல் துறைச் செயலாளர்கள் வரை பல்வேறு மட்டங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட உள்ளன. இந்தக் கண்காணிப்பின் போது அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்பது ஆய்வு செய்யப்பட்டு, தொடர்ந்து தாமதமாக வருபவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
அரசுப் பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது மற்றும் பணிநேரத்தில் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது..













