
நெல்லை ,மே 19:நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மேலப்பாளையம் மாநகராட்சி கால்நடை சந்தையில்,பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டு விற்பனையில் சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது.தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகளும்,பொதுமக்களும் திரண்டதால் சந்தை வளாகமே பெரும் சலசலப்புடன் காணப்பட்டது.இந்த விற்பனையில் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கொம்பை ரக ஆடு ஒன்று 65 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது ஒட்டுமொத்த சந்தையிலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலப்பாளையம் மாநகராட்சி கால்நடை சந்தையானது வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கூடுவது வழக்கமாகும்.தென் தமிழகத்தின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான இங்கு ஆடு,மாடு,கோழி உள்ளிட்ட கால்நடைகள் மட்டுமின்றி,உள்ளூர் விவசாயிகளின் விளைபொருட்களும் நேரடியாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.வழக்கமான நாட்களை விடவும்,பண்டிகை காலங்கள் மற்றும் தென் மாவட்டங்களின் முக்கிய கோவில் கொடை விழாக்கள் நடைபெறும் சமயங்களில் இந்த சந்தையின் வர்த்தகம் பன்மடங்கு அதிகரிப்பதுடன்,பல கோடி ரூபாய் பணப்புழக்கமும் ஏற்படும்.அந்த வகையில்,வரும் 28ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி,நேற்று அதிகாலை முதலே சந்தையில் வியாபாரமும்,மக்கள் கூட்டமும் களைகட்டத் தொடங்கியது.
Also read : நெல்லையில் WhatsApp குழு மூலம் லாட்டரி விற்பனை.. வாலிபர் கைது
பண்டிகையின் முக்கிய அங்கமான குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளை வாங்குவதற்கு நெல்லை,தூத்துக்குடி,தென்காசி உள்ளிட்ட சுற்றுவட்டார தென் மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமிய பெருமக்கள் அதிகாலை முதலே மேலப்பாளையத்தில் குவியத் தொடங்கினர்.இதற்கு இணையாக,கிராமப்புறங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகளும்,இடைத்தரகர்களும் தங்களது கால்நடைகளை லாரிகள் மற்றும் மினி வேன்களில் ஏற்றி வந்து சந்தைப்படுத்தினர்.நேற்றைய சந்தை நிலவரப்படி சுமார் 2,500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்ததாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சந்தைக்கு வந்திருந்த ஆடுகளில் செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு என இரண்டு பிரிவுகளிலும் பல்வேறு ரகங்கள் இடம்பெற்றிருந்தன.குறிப்பாக செம்மறி ஆட்டு பிரிவில் பொட்டு குட்டி,செங்குட்டி,மகிழம்பாடி போன்ற உள்ளூர் ரகங்கள் அதிக அளவில் காணப்பட்டன.அதேபோல வெள்ளாட்டு பிரிவில் கருப்பு கிடா,கொடியாடு,பல்லையாடு போன்ற பல்வேறு ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.பொதுவாக ஆடுகளின் எடை,அதன் உடல் தோற்றம்,கொம்புகளின் அமைப்பு மற்றும் அது சார்ந்த இனம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.
நேற்றைய வர்த்தகத்தில் சாதாரண ரக ஆடுகள் அவற்றின் தரத்திற்கு ஏற்ப 7,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரையிலான விலைகளில் கைமாறின.எனினும்,நல்ல தடிமனான உடலமைப்புடன் காணப்பட்ட கருப்பு நிற செம்மறி கிடா ஒன்று 40,000 ரூபாய்க்கு விற்பனையானது.இதனைத் தொடர்ந்து,வாங்குபவர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருந்த கொம்பை மற்றும் குறும்பை ரக ஆடுகளுக்கும் கடும் போட்டி நிலவியது.இதில்,கர்நாடக மாநிலத்தில் இருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டிருந்த கொம்பை ரக ஆடு ஒன்று,நீண்ட நேர பேரத்திற்குப் பிறகு 65,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்த அதிகப்படியான விலை நிலவரம் சந்தைக்கு வந்திருந்த மற்ற வியாபாரிகள் மத்தியில் அன்றைய நாளின் முக்கிய பேசுபொருளாக மாறியது.இதற்கு அடுத்தபடியாக குறும்பை ரக ஆடுகள் அதிகபட்சமாக 48,000 ரூபாய் வரை விற்பனையானதாக சந்தை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
அதிகாலை 4 மணிக்கே தொடங்கிய இந்த ஆட்டு விற்பனை,மதியம் வரை எவ்வித தொய்வும் இன்றி விறுவிறுப்பாக நடைபெற்றது.மேலப்பாளையம் சந்தைக்குள் மக்கள் அலையெனத் திரண்டதால்,அதன் வெளிப்புறப் பகுதியான மேலப்பாளையம் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் உள்ளூர் மக்களும்,வியாபாரிகளும் ஈடுபட்டனர்.பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில்,அடுத்த வார சந்தையில் ஆடுகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற கணக்குடன்,உள்ளூர் மற்றும் வெளியூர் இறைச்சிக் கடைக்காரர்கள் பலர் இப்போதே தங்களுக்குத் தேவையான ஆடுகளை 10,20 என மொத்தமாக கொள்முதல் செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றதை காண முடிந்தது.
இந்த முறை சந்தை நிலவரத்தை உற்று நோக்கிய போது,வழக்கமான வெள்ளாடுகளைக் காட்டிலும் செம்மறி ஆடுகளுக்கே இஸ்லாமிய பெருமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.குர்பானி வழங்குவதற்காக உடல் ஆரோக்கியமும்,நல்ல எடையும் கொண்ட ஆடுகளையே மக்கள் தேடித் தேடி வாங்கியதால்,பெரிய அளவிலான செம்மறி கிடாய்கள் அனைத்தும் சந்தை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.
தற்போது தமிழகக் கடற்கரை பகுதிகளில் வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால்,சந்தைகளில் மீன்களின் வரத்து குறைந்து அவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக கோழி இறைச்சியின் விலையும் சந்தையில் அதிகரித்துள்ளதால்,அதன் தாக்கம் மேலப்பாளையம் கால்நடை சந்தையிலும் எதிரொலித்தது.இந்த முறை ஆடுகள் மட்டுமின்றி நாட்டுக்கோழி விற்பனையும் வழக்கத்தை விட பன்மடங்கு அதிகரித்திருந்தது.சந்தை வளாகத்திற்கு வெளியே உள்ள டக்கரம்மாள்புரம் சாலையின் இருபுறங்களிலும் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டு நாட்டுக்கோழிகள் விற்பனை செய்யப்பட்டன.ஞாயிற்றுக்கிழமை இறைச்சித் தேவைக்காகவும்,பண்டிகை முன்னேற்பாடாகவும் பொதுமக்கள் பலர் நாட்டுக்கோழிகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றதால்,அந்த சாலையும் ஒரு திருவிழாக் கூட்டத்தைப் போல பரபரப்பாக காட்சியளித்தது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென் தமிழகத்தில் கிராமப்புற பொருளாதாரம் மற்றும் கால்நடை வர்த்தகம் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளதற்கான நேரடி சான்றாக இந்த மேலப்பாளையம் சந்தை அமைந்துள்ளது.கடந்த சில மாதங்களாக வறட்சி மற்றும் தீவன பற்றாக்குறையால் சிரமப்பட்டு வந்த விவசாயிகளுக்கும்,சிறு வியாபாரிகளுக்கும் இந்த பண்டிகைக் கால விற்பனை ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக மாறியுள்ளது.








