
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை திடீர் விலகல்: எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமான கடிதம்
சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை தனது பதவிகளையும் கட்சி உறுப்பினர் பொறுப்பையும் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.அண்மைக்காலமாக அதிமுகவுக்குள் நீடித்து வரும் உட்கட்சி சூழ்நிலைகளை வெளிப்படையாக விமர்சித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ள உருக்கமான கடிதம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also read : பிஎம்ஸ்ரீ திட்டம் ஏற்கப்படுமா? “தாய்மொழி + ஆங்கிலம் தான் உறுதி” – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
“கற்பூரம் கரையலாம்… கட்சி கரையலாமா?” என்ற உணர்ச்சி மிகுந்த வரியுடன் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ள அந்த அதிகாரப்பூர்வ கடிதத்தில் பொதுத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் தொடர்ந்து அரங்கேறி வரும் சம்பவங்கள் தனக்கு ஆழ்ந்த மனவேதனையை அளித்துள்ளதாக செம்மலை குறிப்பிட்டுள்ளார்.இயக்கம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து ரத்தம் சிந்தி உழைத்த லட்சக்கணக்கான ரத்தத்தின் ரத்தங்களான தொண்டர்களின் தற்போதைய மனநிலையும் இதேபோலத்தான் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த காலத்திலும் தற்போதும் தலைமை எடுக்கும் பல முடிவுகளும் நடக்கும் பல சம்பவங்களும் கட்சிக்கு திருப்தி அளிப்பதாக இல்லை என்றும் அவை கவலையையும் விரக்தியையும் மட்டுமே தொண்டர்கள் மத்தியில் உருவாக்குவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரால் ரத்தமும் சதையுமாக உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் இரும்புக்கரம்கொண்டு காப்பாற்றப்பட்ட பேரியக்கத்திற்கு இந்த நிலைமையா என்ற கேள்வியை எழுப்பியுள்ள செம்மலை, “நோகுதையா மனசு நோகுதையா” என்ற பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி தனது மனக்காயத்தை கடிதத்தில் விவரித்துள்ளார்.உட்கட்சி மோதல்களால் அதிமுக பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் ஊடகங்களிலும் தொடர்ந்து கேலிப் பொருளாக மாறி விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.அண்மைக்காலமாக முன்னணி ஆங்கில நாளிதழ்களே தற்போது அதிமுகவின் செயல்பாடுகளைப் பரிகசிக்கும் அவல நிலை உருவாகிவிட்டது என்ற அவரது நேரடி குறிப்பு கட்சியின் தற்போதைய அரசியல் வீழ்ச்சியை படம்பிடித்துக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு தனக்கு கட்சியில் பல முக்கிய வாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டாலும் அதை ஒருபோதும் தான் பொதுவெளியில் பேசவில்லை என்றும் தலைமையின் கட்டுப்பாட்டிற்கு இணங்கி விசுவாசமாகப் பணியாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.ஆனால் தற்போதைய சுயநல அரசியல் சூழ்நிலை தனது மனதை முற்றிலுமாக உடைத்துவிட்டதாக அவர் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.
சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த செம்மலை அதிமுகவின் அமைப்புச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியவர்.எம்.ஜி.ஆர் காலம் தொட்டு ஜெயலலிதா தலைமை வரை பல்வேறு இக்கட்டான கட்டங்களில் கட்சியின் தூணாக விளங்கியவர்.அதிமுக ஆட்சிக் காலத்தில் கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் தமிழ்நாடு சட்டமன்றத் துணை சபாநாயகராகவும் பொறுப்பு வகித்த இத்தகைய மூத்த தலைவரின் விலகல் சாதாரண நிகழ்வாகக் கடந்து போக முடியாது.
ராஜினாமா கடிதத்தை அனுப்பிய கையோடு செய்தியாளர்களைச் சந்தித்த செம்மலை தற்போதைய அதிமுக தலைமையின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் இருந்த ராணுவக் கட்டுப்பாடும் தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் பண்பும் தற்போதைய தலைமையிடம் முற்றிலும் காணப்படவில்லை என்றார்.தற்போதைய முக்கிய நிர்வாகிகளுக்கிடையே நிலவும் ஈகோ மோதல்களே கட்சியின் வளர்ச்சியை அடியோடு தடுப்பதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.மூத்த நிர்வாகிகள் அனைவரும் தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு ஒன்றாக அமர்ந்து பேசி கட்சியை காப்பாற்றுவதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுகவிலிருந்து விலகியதால் அவர் வேறு ஏதேனும் அரசியல் கட்சியில் இணையப் போகிறாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.தனக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்திருந்தால் இந்த ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு உங்களிடம் பேட்டி அளித்துக் கொண்டிருக்க மாட்டேன் என்றும் வேறு கட்சியில் சேர்ந்த பிறகே ஊடகங்களைச் சந்தித்திருப்பேன் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.தனது எதிர்கால அரசியல் பயணத்தை காலம் தான் தீர்மானிக்கும் என்ற அவரது இறுதி வார்த்தை பல்வேறு அரசியல் ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.








