
தமிழ்நாட்டிற்கு ஒலிம்பிக் பதக்கம் மற்றும் போதை இல்லாத சமூகம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி
சென்னை,மே 18: தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையை வெறும் போட்டிகளுக்கானதாக மட்டும் சுருக்கிவிடாமல், அதனை இளைஞர்களின் வாழ்வியல் மாற்றத்திற்கான முதன்மை ஆயுதமாக மாற்றப் போவதாக புதிய விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விரிவான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தமிழக விளையாட்டுத் துறையின் எதிர்காலப் பார்வை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
செய்தியாளர் சந்திப்பை உணர்ச்சிபூர்வமாகத் தொடங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தான் ஒரு அமைச்சராக இந்த வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பாக இதே விளையாட்டு விடுதியில் (Sports Hostel) தங்கிப் பயிற்சி பெற்ற ஒரு தடகள வீரன் என்பதை நினைவு கூர்ந்தார்.அந்த வகையில் நேரு ஸ்டேடியம் தான் தனது சொந்த வீடு என்றும் விளையாட்டு வீரர்களின் தேவைகளும் நிலவரமும் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.விளையாட்டுத் துறை என்பது வெறும் பதக்கங்களை வெல்வது மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த இளைஞர்களின் உடல்நலம் சமூகப் பண்பாட்டு மாற்றம் மற்றும் மாநிலத்தின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சியோடு நேரடித் தொடர்புடையது என்பதை அவர் வலியுறுத்தினார்.
“தலித் முதல்வர் விவகாரம்: திருமா விளக்கம்”
அவரது இந்தச் செய்தியாளர் சந்திப்பின் மிக முக்கிய அம்சமாக இருந்தது கல்வியும் விளையாட்டும் சமமானவை (Sports = Education) என்ற புதிய அணுகுமுறைதான்.தற்போது தமிழகத்தில் பள்ளி அளவிலான போட்டிகள் (School Games) மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் (National Games) குறித்த விழிப்புணர்வு மட்டுமே ஓரளவுக்கு இருக்கிறது.ஆனால் உலகளாவிய ஒலிம்பிக் போட்டிகளை இலக்காகக் கொண்டு சிறு வயதிலிருந்தே திட்டமிட்டுப் பயிற்சி அளிக்கும் முறையானது நம்மிடம் இன்னும் முழுமையாக உருவாகவில்லை என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளில் எட்டு முதல் பத்து வயதிற்குள்ளேயே ஒலிம்பிக் கனவோடு குழந்தைகளைத் தேர்வு செய்து அவர்களுக்கான பிரத்யேகப் பயிற்சிகள் தொடங்கப்பட்டு விடுகின்றன.இதேபோன்றதொரு ‘ஒலிம்பிக் விஷன் சிஸ்டம்’ (Olympic Vision System) தமிழ்நாட்டிலும் விரைவில் கட்டமைக்கப்படும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
கடந்த நூறு ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் தமிழ்நாடு தனிநபர் பிரிவில் இன்னும் ஒரு பதக்கத்தைக் கூட வெல்லவில்லை என்ற கசப்பான உண்மையை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எவ்விதத் தயக்கமும் இன்றி நேரடியாக ஒப்புக்கொண்டார்.பொருளாதார ரீதியாகத் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்த போதிலும் சர்வதேசத் தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் இன்னும் உள்கட்டமைப்புக் குறைபாடுகள் நீடிக்கவே செய்கின்றன என்றார்.இந்தக் குறைகளைக் களைவதற்காக மாவட்ட வாரியாக அதிநவீன விளையாட்டு அகாடமிகள் அமைப்பது, சர்வதேசத் தரத்திலான பயிற்சி மையங்களை உருவாக்குவது, முறையான ஊட்டச்சத்து மற்றும் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் (Sports Science) ஆதரவை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.மேலும் ஒலிம்பிக் போட்டிகளுக்கெனப் பிரத்யேகப் பயிற்சி முறைகளை உருவாக்குவதோடு, கிராமப்புறங்களில் மறைந்திருக்கும் விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து வெளிக்கொண்டு வருவதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்று அவர் விவரித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் தற்போது பெரும் சவாலாக உருவெடுத்து வரும் போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்க கலாச்சாரத்தை வேரோடு ஒழிப்பதற்குக் விளையாட்டுத் துறையை ஒரு முக்கிய ஆயுதமாக அரசு பயன்படுத்தும் என்றார்.இதற்கு உலகளாவிய உதாரணமாகப் பிரேசில் நாட்டை அவர் சுட்டிக்காட்டினார்.ஒரு காலத்தில் கடுமையான போதைப்பொருள் கலாச்சாரத்தில் சிக்கித் தவித்த பிரேசில், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை நோக்கித் தங்களது இளைஞர்களை திசைதிருப்பியதன் மூலம் எப்படி ஒரு மாபெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை விளக்கினார்.அதே பாணியில் தமிழ்நாட்டிலும் பள்ளி நிலை முதலே விளையாட்டைப் பாடத்திட்டத்துடன் ஒருங்கிணைப்பது, கிராம அளவில் விளையாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது, மாவட்ட அளவிலான தொடர் போட்டிகளை நடத்துவது மற்றும் இளைஞர்களை நல்வழியில் ஈடுபடுத்தும் திட்டங்கள் மூலமாக அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் போதை இல்லாத சமூக மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மாநிலத்தில் அதிகரித்து வரும் மதுப் பழக்கம் (Liquor Consumption) காரணமாக ஏற்படும் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் மற்றும் மன அழுத்தங்கள் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்துகொண்டார்.போதைக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான மறுவாழ்வு மையங்களைத் (Rehab Centres) திறப்பது மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வாகாது என்று குறிப்பிட்ட அவர் குழந்தை பருவத்திலிருந்தே விளையாட்டை ஒரு வாழ்க்கை முறையாக மாற்ற வேண்டும் என்றார்.இதற்காகப் புதிய பள்ளி விளையாட்டுத் கொள்கை (School Sports Policy), கட்டாய உடற்பயிற்சி முறைகள், கல்வியோடு இணைக்கப்பட்ட விளையாட்டு நடைமுறைகள் மற்றும் விளையாட்டின் மூலமாக மன அழுத்தத்தை மேலாண்மை செய்யும் திட்டங்களை அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.
ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்கு இணையாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் அரசு தகுந்த முக்கியத்துவம் அளிக்கும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.குறிப்பாக ஜல்லிக்கட்டு, சிலம்பம் மற்றும் பாரம்பரிய கிராமிய விளையாட்டுகள் என்பவை வெறும் பொழுதுபோக்கு அல்ல; அவை தமிழர்களின் அடையாளத்தின் ஒரு பகுதி மற்றும் இளைஞர்களின் உடல், மன ஆரோக்கியத்தோடு பிணைக்கப்பட்டுள்ளவை என்றார்.இந்த விளையாட்டுகளைச் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்வதற்கான விரிவான திட்டங்கள் தற்போது தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்துப் பேசிய அவர் நம் மாநிலத்தில் 25,000 முதல் 30,000 பேர் வரை அமரக்கூடிய அளவிலான சர்வதேசத் தரத்திலான விளையாட்டு மைதானங்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்பதை வெளிப்படையாகத் தெரிவித்தார்.இதன் காரணமாகவே, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை (National Games) இன்னும் நடத்தாத மாநிலம் என்ற நிலை நீடிக்கிறது.இந்த நிலையை மாற்றி, தமிழகத்திற்குப் பிரம்மாண்டமான ‘ஸ்போர்ட்ஸ் சிட்டி’ (Sports City) உள்கட்டமைப்பைக் கொண்டு வருவது, மண்டல வாரியாகப் புதிய சர்வதேச விளையாட்டு அரங்களை மேம்படுத்துவது மற்றும் உலகளாவிய போட்டிகளைத் தமிழகத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடந்து வருவதாகக் குறிப்பிட்டார்.கடந்த 1994 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் காலத்தில் நடைபெற்ற ‘சாப்’ (SAF Games) விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு தமிழகத்தில் இத்தகைய பெரிய சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை என்பதை நினைவுகூர்ந்த அமைச்சர் அந்த நிலையை மாற்றுவதற்கான உத்திகளுடன் தற்போதைய அரசு செயல்பட்டு வருவதாகக் கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.








