TVK அரசில் செங்கோட்டையனுக்கு நிதித்துறை.. விஜய் வைத்த ‘மாஸ்டர் பிளான்’ என்ன?

image 346

சிறப்பு செய்திகள் , மே 16 : தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக்கழக அரசின் அமைச்சரவை துறை ஒதுக்கீடு தற்போது வெளியாகி அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக அனுபவம் மிக்க செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டிருப்பது அரசின் நிர்வாக அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, தொழில்துறை, கனிம வளம், விளையாட்டு உள்ளிட்ட பல முக்கிய துறைகள் புதிய முகங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதும் கவனம் ஈர்த்துள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சியில் யார் எந்த துறையை கவனிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி கடந்த சில நாட்களாகவே பேசுபொருளாக இருந்து வந்தது. தற்போது வெளியான தகவல்களின் அடிப்படையில், பல முக்கிய துறைகள் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மகளிர் நலன், இளைஞர் நலன், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய துறைகள் முதல்வர் விஜயின் கீழ் இருப்பது அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் முக்கியமான சிக்னலாக பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையனுக்கு நிதித்துறை.. அனுபவத்திற்கு கிடைத்த முக்கியத்துவம்

அமைச்சரவை அமைப்பில் அதிக கவனம் பெற்ற முடிவுகளில் ஒன்றாக செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டிருப்பது பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சர்களால் நிரம்பியுள்ள இந்த அமைச்சரவையில் நீண்டகால அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் கொண்ட ஒருவராக செங்கோட்டையன் இருப்பதால், நிதி சார்ந்த சவால்களை கையாள அவரே பொருத்தமான தேர்வு என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ALso read : முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு

பதவியேற்பு நிகழ்ச்சியிலேயே தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து முதல்வர் விஜய் குறிப்பிட்டிருந்தார். மாநிலத்தின் கடன் நிலை, வெள்ளை அறிக்கை வெளியிடும் திட்டம், பெண்களுக்கு ரூ.2500 வழங்கும் திட்டம் போன்ற பெரிய அறிவிப்புகள் வெளியான நிலையில், அதற்கான நிதி மேலாண்மை மிகப்பெரிய சவாலாக இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் தரவுகளோடு பேசக்கூடிய, நிர்வாக அனுபவம் உள்ள நபராக செங்கோட்டையன் தேர்வு செய்யப்பட்டிருப்பது அரசின் முக்கியமான தீர்மானமாக பார்க்கப்படுகிறது.

ராஜ்மோகனுக்கு பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சி

தமிழ் வளர்ச்சி துறையும் பள்ளிக்கல்வித்துறையும் ராஜ்மோகனுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது மற்றொரு முக்கிய அம்சமாக மாறியுள்ளது. அரசியலுக்கு புதியவராக இருந்தாலும், பேச்சாற்றலால் கவனம் பெற்றவர் என்ற அடிப்படையில் இந்த துறைகள் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என கூறப்படுகிறது.

தமிழ் வளர்ச்சி துறையின் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் பேச்சுப் போட்டிகள், இலக்கிய நிகழ்ச்சிகள், மொழி சார்ந்த திட்டங்கள் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக முன்னாள் தலைவர்களின் நினைவு தினங்களோடு இணைந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த நிலையில், இனி அந்த துறையில் என்ன மாற்றங்கள் வரும் என்பது கவனிக்கப்படுகிறது.

அதேபோல் பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாட்டின் எதிர்கால தலைமுறையை வடிவமைக்கும் முக்கிய துறையாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் அன்பில் மகேஷ் கவனித்த இந்த துறையில், மாநில கல்விக் கொள்கை, அரசு பள்ளி மேம்பாடு, தமிழ் மொழி சார்ந்த பாடத்திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் முக்கியமாக இருக்கும் சூழலில் ராஜ்மோகனின் செயல்பாடு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் விஜயின் நேரடி கட்டுப்பாட்டில் முக்கிய துறைகள்

தேர்தல் பிரச்சாரத்தின் போதே பெண்கள் பாதுகாப்பு, இளைஞர் நலன் போன்ற துறைகளை நேரடியாக கவனிப்பேன் என்று முதல்வர் விஜய் கூறியிருந்தார். தற்போது அந்த வாக்குறுதிக்கேற்ப மகளிர் நலன் உள்ளிட்ட துறைகள் அவரது கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன.

“சிங்கப் பெண்கள் பாதுகாப்பு படை” போன்ற அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் பிரச்சினைகள், சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் ஆகியவற்றில் அரசு நேரடி கவனம் செலுத்தும் என்ற சிக்னலை இந்த துறை ஒதுக்கீடு வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் நகராட்சி நிர்வாகம் போன்ற மிகப்பெரிய துறைகளும் தற்போது முதல்வரின் கீழ் இருப்பதால், இது தற்காலிக ஏற்பாடாக இருக்கலாம் என்றும், அமைச்சரவை விரிவாக்கத்தின் போது சில துறைகள் பிரித்து வழங்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

ஆதவ் அர்ஜுனாவுக்கு விளையாட்டு துறை

கடந்த ஆட்சியில் உதயநிதி ஸ்டாலின் கவனித்த விளையாட்டு துறை தற்போது ஆதவ் அர்ஜுனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அமைப்புகளில் முன்பே பொறுப்புகள் வகித்த அனுபவம், விளையாட்டு வீரர்களோடு நேரடி தொடர்பு, மாநிலம் முழுவதும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனுபவம் ஆகிய காரணங்களால் அவர் இந்த துறைக்கு பொருத்தமானவர் என பார்க்கப்படுகிறது.

குறிப்பாக “ஒரு தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம்” போன்ற திட்டங்கள் கடந்த ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவற்றை தொடர்ச்சியாக செயல்படுத்த வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசுக்கு உள்ளது.

கீர்த்தனா, டாக்டர் பிரபு மீது கூடுதல் கவனம்

இந்த அமைச்சரவையில் அதிக கவனம் பெற்றவர்களில் கீர்த்தனா மற்றும் டாக்டர் பிரபு முக்கியமானவர்கள். கீர்த்தனாவுக்கு தொழில்துறை வழங்கப்பட்டிருப்பது பெரிய பொறுப்பாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சில சர்ச்சைகளில் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், தொழில்துறை போன்ற மாநில வளர்ச்சியை தீர்மானிக்கும் துறையை அவர் எப்படி கையாளப் போகிறார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு பக்கம், டாக்டர் பிரபுவுக்கு கனிம வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல், கனிம வள மேலாண்மை ஆகியவை நேரடியாக தொடர்புடைய இந்த துறை மிகுந்த பொறுப்புடையதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து குரல் கொடுத்த சீமானை காரைக்குடியில் தோற்கடித்த பின்னணியில், டாக்டர் பிரபுவின் செயல்பாடுகள் அதிக கவனத்தை பெறலாம் என கூறப்படுகிறது.

அமைச்சரவை விரிவாக்கம் அவசியமா?

தற்போதைய அமைச்சரவை இன்னும் முழுமையான அமைப்பாக இல்லை என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. பல துறைகளில் ஆயிரக்கணக்கான கோப்புகள் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் அவசியம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக பல அரசு மருத்துவமனைகளில் தமிழக வெற்றிக்கழக எம்.எல்.ஏக்கள் ஆய்வு மேற்கொண்டதும் கவனம் பெற்றுள்ளது. அமைச்சர்கள் முழுமையாக பொறுப்பேற்ற பின்னரே துறைகள் வேகமாக இயங்கும் சூழல் உருவாகும் என்பதால், விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1179

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »