

Pollachi . May 12 : பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் நிவாரண நிதி மற்றும் சிறப்பு சிகிச்சை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொள்ளாச்சி-பல்லடம் பிரதான சாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்து தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துகடவு வட்டத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
Also Read : முதல்வர் விஜய் அதிரடி ஆக்ஷன்.. தலைமை செயலகத்தில் அவசர கூட்டம் – குடிநீர், நகராட்சி குறித்து பரபரப்பு ஆலோசனை
பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் எப்படி நடந்தது இந்த விபத்து?
அரசு வெளியிட்ட தகவலின்படி, சேலம் மாவட்டம் காடையம்பட்டியைச் சேர்ந்த திரு. தனபால் (37), அவரது மனைவி திருமதி மேனகா (35), உறவினரான செல்வி சினேகா (23), குடும்பத்தைச் சேர்ந்த செல்வி கனிஷ்கா (17) மற்றும் சிறுவன் சுர்ஜித் (12) ஆகியோர் TN-30-DZ-9734 என்ற எண் கொண்ட Cruiser ரக காரில் பொள்ளாச்சியிலிருந்து பல்லடம் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் சாத்தம்பட்டியைச் சேர்ந்த சரவணன் (39) என்பவர் ஓட்டிச் சென்ற TN-29-BU-4402 என்ற சரக்கு லாரி, பல்லடத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. கவனக்குறைவாக ஓட்டப்பட்ட லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில் எதிரே வந்த Cruiser கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சாலை விபத்து தாக்கம் மிகவும் கொடூரமாக இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே பலர் படுகாயமடைந்த நிலையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த கோர விபத்தில், திரு. தனபால் (37) , திருமதி மேனகா (35) , செல்வி சினேகா (23) ,
செல்வி கனிஷ்கா (17) ஆகிய நால்வரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 12 வயது சிறுவன் சுர்ஜித் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சிறுவனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த நிவாரண நிதி
இந்த துயரச் சம்பவம் குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், “இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் சுர்ஜித்துக்கு ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ.13 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.








