திண்டுக்கல் , ஜூன் 17 : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தலையில் பாத்திரம் சிக்கியதால் வழி தெரியாமல் தவித்த ஆடு ஒன்று, எதிர்பாராதவிதமாக 90 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த நிலையில், தீயணைப்புத் துறையினரின் விரைவான நடவடிக்கையால் உயிருடன் மீட்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அரண்மனைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசக்தி. விவசாயியான இவர் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில், இவரது தோட்டத்தில் மேய்ந்துகொண்டிருந்த ஆடு ஒன்றின் தலையில், அங்கு கிடந்த பாத்திரம் ஒன்று எதிர்பாராதவிதமாக பலமாக மாட்டிக்கொண்டது. தலையில் மாட்டிய பாத்திரத்தை கழற்ற முடியாமல் அந்த ஆடு நீண்ட நேரம் போராடியுள்ளது.
கண்கள் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், பாத்திரத்தோடு வழி தெரியாமல் அங்கும் இங்குமாக தறிகெட்டு ஓடிய அந்த ஆடு, தோட்டத்தில் இருந்த சுமார் 90 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றுக்குள் திடீரென தவறி விழுந்தது. ஆடு கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதன் உரிமையாளர் சிவசக்தி, உடனடியாக ஒட்டன்சத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
போலி ஆவணம் மூலம் நில உரிமை கோர முடியாது: நெல்லை நீதிமன்றம் அதிரடி
தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 90 அடி ஆழமுள்ள அந்தப் பாழடைந்த கிணற்றில் தண்ணீர் குறைவாகவே இருந்தபோதிலும், ஆழம் அதிகமாக இருந்ததால் மீட்புப் பணியில் சவால் நீடித்தது. உடனே தீயணைப்பு வீரர் ஒருவர் கயிறு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி கிணற்றின் அடிப் பகுதியில் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த ஆட்டை சாதுரியமாக வலை மூலம் கட்டி, சக வீரர்களின் உதவியுடன் பத்திரமாக மேலே தூக்கி மீட்டு வந்தனர். கிணற்றில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்ட உடனே, அதன் தலையில் மாட்டிக்கொண்டிருந்த பாத்திரமும் பாதுகாப்பாக அகற்றப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மீட்புப் போராட்டத்தின் முடிவில், எவ்வித ஆபத்துமின்றி உயிருடன் மீட்கப்பட்ட ஆடு, அதன் உரிமையாளர் சிவசக்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.








