வால்பாறை , ஜூன் 14: கோவை மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலமாகவும் ,‘ஏழாவது சொர்க்கம்’ என்றும் அழைக்கப்படும் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வால்பாறை நகரம் ,சோலையார் அணை ,முடீஸ் ,சின்னக்கல்லார் ,சின்கோனா உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் விட்டுவிட்டுப் பெய்து வரும் கனமழையாலும் ,தொடர் சாரல் மழையாலும் அங்குள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ,வால்பாறையை அடுத்த சோலையார் பிர்லா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. நீர்நிலைகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதைக் கணக்கில் கொண்டும் ,சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் ,பிர்லா நீர்வீழ்ச்சிக்குச் செல்ல வால்பாறை வட்டாட்சியர் மற்றும் காவல்துறை சார்பில் அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு ,நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் பாதையில் தற்காலிகச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு ,போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு ,திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
ஒட்டன்சத்திரம் சந்தையில் முருங்கை விலை கிடுகிடு உயர்வு: கிலோ ₹100-க்கு விற்பனை
இருப்பினும் ,அதிகாரப்பூர்வத் தடையையும் மீறி ,சில சுற்றுலாப் பயணிகள் மாற்றுப் பாதைகள் வழியாகத் திருட்டுத்தனமாக நீர்வீழ்ச்சிப் பகுதிக்குள் அத்துமீறி நுழைவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. காட்டாற்று வெள்ளத்தின் வேகம் எந்த நேரத்திலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் ,இத்தகைய ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று வருவாய்த்துறையினரும் போலீஸாரும் எச்சரித்துள்ளனர். வால்பாறைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில் ,பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றிப் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என நிர்வாகத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.








