சென்னை , ஜூன் 13 : தமிழகத்தில் சமூக விரோதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராகக் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 1,328 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பேணவும் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கவும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இந்த மாநிலம் தழுவிய சிறப்பு வேட்டை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த மே 28-ஆம் தேதி தொடங்கி ஜூன் 10-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு ரவுடிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் காவல்துறை தீவிரமாகக் கண்காணித்து வந்தது. இந்த அதிரடி நடவடிக்கையின் போது மாநிலம் முழுவதும் மொத்தம் 36,740 பேர் தீவிர விசாரணை மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுள் பல்வேறு குற்றச் செயல்களில் நேரடியாகத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்ட 1,328 நபர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளனர்.
Also : ஆண் நண்பரின் பிறந்தநாளுக்கு Surprise அவதாரம் எடுத்த பெண் கைது: வேலூரில் அதிர்ச்சி
இதற்கிடையே நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. இதன் பலனாக ஜூன் 1 முதல் ஜூன் 10 வரையிலான பத்து நாட்களில் மட்டும் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த 2,939 பிடியாணை உத்தரவுகள் (Warrants) நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய தலைமறைவு குற்றவாளிகளையும் விரைந்து பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து தொய்வின்றி நடந்து வருவதாகக் காவல்துறைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ரவுடிகள் மற்றும் பழைய குற்றவாளிகளுக்கு எதிரான இந்நடவடிக்கை ஒருபுறமிருக்க தமிழக இளைய தலைமுறையினரைப் சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கும் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சோதனைகளின் போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 231 கிலோ கஞ்சா, 4,023 போதை மாத்திரைகள், மற்றும் மெத்தாம்பேட்டமைன், எம்.டி.எம்.ஏ போன்ற வீரியமிக்க செயற்கை போதைப்பொருட்களும், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களும் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட 17 வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் 14 இருசக்கர வாகனங்களும் 3 நான்கு சக்கர வாகனங்களும் அடங்கும். இந்த போதைப்பொருள் தடுப்பு வேட்டையின் மூலமும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.
இவற்றுடன் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் மற்றும் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கும், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வரும் குற்றவாளிகளைக் கண்காணிப்பதற்கும் காவல்துறைக்குக் கூடுதல் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சற்றும் இரக்கமின்றி கடுமையான குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் பாயும் எனத் தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.








