நெல்லை மேலப்பாளையம் அருகே சேதமடைந்த சாலையால் ஏற்பட்ட விபத்தில் ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் குற்றம் சாட்டியுள்ளார். பணிகளை உடனடியாகத் தொடங்காத பட்சத்தில் திமுக சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பத்தமடை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்முகைதீன். இவர் தனது மனைவி மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தை ரெஷிமாவுடன் இருசக்கர வாகனத்தில் மேலப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். மேலப்பாளையம் கருங்குளம் அருகே வாகனம் வந்தபோது அங்கிருந்த மோசமான குண்டும் குழியுமான சாலையின் காரணமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் படுகாயமடைந்த ஒன்றரை வயது குழந்தை ரெஷிமா பரிதாபமாக உயிரிழந்தது.
இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த குழந்தையின் உறவினர்களும் பொதுமக்களும் அப்பகுதியில் உடனடியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்வகாப் விபத்து நடந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். விபத்து நடந்த விதம் குறித்தும் அதன் காரணங்கள் குறித்தும் அங்குள்ள பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தபோது சாலையின் மோசமான நிலையே விபத்துக்குக் காரணம் என்று மக்கள் ஒருமுகமாகக் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து விபத்தில் குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது விபத்தில் ஒன்றரை வயது குழந்தை இறந்தது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர் இந்த விபத்திற்குப் பாளையங்கோட்டை எம்.எல்.ஏ தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் சிலர் திட்டமிட்டுத் தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகக் கண்டனம் தெரிவித்தார்.
தொகுதியின் உள்கட்டமைப்பு பணிகள் குறித்து விளக்கிய அவர் பாளையங்கோட்டை தொகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்காக 650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் சேதமடைந்த சாலைகளைச் சீரமைப்பதற்காக 55 கோடி ரூபாயும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் தனியாக 10 கோடி ரூபாயும் நிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த திமுக ஆட்சியிலேயே இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட வேண்டிய இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் தற்போது அந்தப் பணிகள் அனைத்தும் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் தான் விளக்கம் கேட்டபோது மேலிடத்திலிருந்து பணியை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளதாகப் பதிலளித்ததாக அப்துல்வகாப் குறிப்பிட்டார்.
அரசின் இந்த முடக்க நிலைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த எம்.எல்.ஏ மேலிடம் என்பது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். சாலை சீரமைப்பு பணிகளுக்குப் போதிய நிதி ஒதுக்கப்பட்ட நிலையிலும் அரசியல் காரணங்களுக்காகப் பணிகளை நிறுத்தி வைத்த கோட்டப் பொறியாளரும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுமே இந்த ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்விக்கும் குழந்தையின் உயிரிழப்பிற்கும் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்டுள்ள சாலை சீரமைப்புப் பணிகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர் தவறும்பட்சத்தில் அடுத்த கட்டமாகத் திமுக சார்பில் மக்களைத் திரட்டி மிகப்பாரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.








