சென்னை , ஜூன் 13 : அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் மீதான ரூ.27.90 கோடி லஞ்ச வழக்கை மறு விசாரணை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு முடிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக வைத்திலிங்கம் பொறுப்பு வகித்தார். தற்போது இவர் ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் அமைச்சராக இருந்தபோது 2016 ஆம் ஆண்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று அனுமதி கோரியது. அந்த அனுமதிக்கு பினாமிகள் மூலமாக ரூ.27.90 கோடி லஞ்சம் கைமாறியதாக ‘அறப்போர் இயக்கம்’ சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் விரிவான புகார் அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ரூ.134 கோடியில் குருவை சிறப்புத் தொகுப்பு திட்டம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 2024 செப்டம்பர் 24 ஆம் தேதி திமுக ஆட்சியில் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்களான பிரபு, சண்முக பிரபு ஆகியோருக்குச் சொந்தமான ‘முத்தம்மாள்’ நிறுவனம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முறைப்படி வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இந்த வழக்கு விசாரணை ஒருபுறம் தீவிரமாக நடந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி வைத்திலிங்கம் திடீரென திமுகவில் இணைந்தார். அவர் ஆளுங்கட்சியில் இணைந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே இந்த வழக்கில் மிக முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி வைத்திலிங்கத்திற்கு எதிரான இந்த ரூ.27.90 கோடி லஞ்ச வழக்கு திடீரென முடித்து வைக்கப்பட்டது. வைத்திலிங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை முழுமையாகக் கைவிடுவதாகக் கூறி நீதிமன்ற அனுமதியுடன் அது அப்போது முடித்து வைக்கப்பட்டது.
அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை மிக முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்து மறு விசாரணை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரான டிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார்.
திமுக அரசு மற்றும் நீதிமன்ற அனுமதியோடு முன்னதாக முடித்து வைக்கப்பட்ட ஒரு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது மீண்டும் முதன்முதலில் இருந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த மறு விசாரணை குறித்த விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் முறைப்படி அறிக்கையாகத் தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.
ஆளுங்கட்சியில் இணைந்த குறுகிய காலத்திலேயே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த திடீர் மறு விசாரணை உத்தரவு மீண்டும் புதிய சட்டச் சிக்கல்களையும் நெருக்குதலையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அனைத்துப் புகார்களையும் முறைப்படி முழுமையாக விசாரித்துத் தகுந்த ஆதாரங்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள விசாரணை அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகம் தரப்பில் இருந்து தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.








