NITI AYOG கூட்டம் – 1.5 டிரில்லியன் டாலர் இலக்கு; நீட் விலக்கு, எய்ம்ஸ், நிதி கோரிக்கைகளை முன்வைத்த முதல்வர் விஜய்
புதுதில்லி: மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படும் அதேவேளையில் தமிழ்நாட்டின் நலன்களையும் மக்களின் விருப்பங்களையும் தனது அரசு உறுதியாகப் பாதுகாக்கும் என்று தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (11.06.2026) நடைபெற்ற நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் முன்னிலையில் ஆற்றிய தனது உரையில் தமிழகத்தின் பொருளாதார இலக்குகள், இளைஞர் நலன், விவசாயம், கடலோரப் பாதுகாப்பு மற்றும் மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு வரவேண்டிய நிதி உரிமைகள் குறித்து விரிவான கோரிக்கைகளை முதலமைச்சர் முன்வைத்தார்.
2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்
உலகளாவிய பொருளாதார சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு இடையிலும் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் தமிழ்நாடு தொடர்ந்து தன் நிலைத்தன்மையை நிரூபித்து வருவதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்தார்.
“2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்போடு வரும் 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் (Trillion Dollar) பொருளாதாரமாக உயர்வதற்குத் தமிழ்நாடு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தொலைநோக்குப் பார்வை இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் சமூக நீதியின் மூலமே இது சாத்தியப்படும் என்றும் அவர் விளக்கினார்.
இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் நீட் (NEET) எதிர்ப்பு
இளைய தலைமுறையின் மக்கள் தொகைப் பலனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் தமிழ்நாடு அரசு பெரும் முதலீடுகளைச் செய்து வருவதாகக் குறிப்பிட்ட முதல்வர், ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பணியிடைப் பயிற்சிகள் (Internships) மற்றும் தொழில்துறை சார்ந்த திறன் பயிற்சிகளை வழங்கும் “Youth Skill and Employment Mission” (இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு இயக்கம்) திட்டத்தை அரசு செயல்படுத்தவுள்ளதாக அறிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் செயற்கை நுண்ணறிவு (AI), Deep Technology, Cloud Computing, மின்சார வாகனத் தொழில்நுட்பம் (EV) மற்றும் Semiconductor துறைகளுக்கான பயிற்சி மையங்களை அமைக்க மத்திய அரசின் ஆதரவை அவர் கோரினார்.
அதேவேளையில் மருத்துவப் படிப்புகளுக்கான “NEET” தேர்வுக்குத் தனது அரசு கொண்டுள்ள கடுமையான எதிர்ப்பை முதல்வர் மீண்டும் பதிவு செய்தார். இத்தேர்வினால் கிராமப்புற மற்றும் சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர்:
- MBBS, BDS மற்றும் AYUSH படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நிரப்புவதற்குத் தமிழ்நாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கோவையில் 2-வது எய்ம்ஸ் மற்றும் வறுமை ஒழிப்பு
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் விளிம்புநிலை குடும்பங்களை அடையாளம் கண்டு நிலையான வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் “Poverty-Free Tamil Nadu Mission” (வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம்) முன்மொழியப்பட்டுள்ளதாகக் கூறிய முதல்வர் இதற்கு மத்திய அரசின் நிதி உதவியைக் கோரினார்.
மேலும் தமிழகத்தில் உயர்தர மருத்துவச் சேவைகளை வற்றாத வகையில் வழங்க கோயம்புத்தூரில் மாநிலத்தின் இரண்டாவது எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையை அமைக்க அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தார். இதற்கான நிலத்தை மாநில அரசே வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
பெண்கள் பாதுகாப்பு: ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’
இந்தியாவின் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 42 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் தான் உள்ளனர் என்ற புள்ளிவிவரத்தைப் பகிர்ந்த முதல்வர் விஜய், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்புப் பிரிவுகள், பொதுப் போக்குவரத்தில் அவசரகால நடவடிக்கை (Emergency Response) அமைப்புகள் மற்றும் CCTV கேமரா வலைப்பின்னல்கள் விரிவாக்கப்படும் என்றார். தொழில்நுட்பம் சார்ந்த காவல் பணிகளுக்காகவும், விரைவான நடவடிக்கைகளுக்காகவும் “Singappen Special Force” (சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை) தொடங்கப்பட்டுள்ளதையும் அவர் அவையில் முறைப்படி அறிவித்தார்.
மீனவர் நலன் மற்றும் காலநிலைத் தாங்குதன்மை பெருந்திட்டம்
விவசாயிகளின் சுமையைக் குறைக்க அண்மையில் ரூ.2,045 கோடி மதிப்பிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தை அரசு அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், கடலோர மீனவர்களின் பாதுகாப்பு குறித்தும் பேசினார். பாக் வளைகுடாப் பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்கவும், இலங்கை மற்றும் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்கத் தூதரக நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தினார்.
தமிழகத்தின் 1,076 கி.மீ நீளக் கடற்கரைப் பகுதி இயற்கைச் சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படுவதால், கடற்கரை நகரங்களில் நிரந்தர வெள்ளத்தடுப்புக் கட்டமைப்புகளை உருவாக்க “Climate Resilient Master Plan 2045” (காலநிலைத் தாங்குதன்மை பெருந்திட்டம் 2045) கீழ் மத்திய அரசு கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அத்துடன் குலசேகரபட்டினத்தில் அமையவுள்ள விண்வெளி உற்பத்தி மையத்தை “தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக” அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
உட்கட்டமைப்பு, குடிநீர் மற்றும் பாரத்நெட் திட்டங்கள்
தமிழகத்தின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் வழித்தடங்களை மேம்படுத்தக் கோரி சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில்வே அமைச்சகங்களிடம் பின்வரும் திட்டங்களுக்கான ஒப்புதலை முதல்வர் கோரினார்:
- ஜி.எஸ்.டி சாலையின் (NH-32) செங்கல்பட்டு – திருச்சி பகுதியை 6 வழிச்சாலையாக மாற்றுதல்.
- NH-81 திருச்சி (பஞ்சப்பூர்) – ஜீயபுரம் – கரூர் பகுதியை 6 வழிச்சாலையாக மேம்படுத்துதல்.
- NH-81 கரூர் – கோயம்புத்தூர் பகுதியை 6 வழிச்சாலையாக மாற்றுதல்.
- NH-87 மாதவரம் – சோழவரம் இடையே உயர்த்தப்பட்ட வழித்தடம் (Elevated Corridor) அமைத்தல்.
- சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் வழித்தடம் (High Speed Rail Corridor) அமைத்தல்.
மேலும் தமிழ்நாட்டில் 97 சதவீதம் நிறைவடைந்துள்ள பாரத்நெட் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கடைசி மைல் இணைப்புகளைச் பூர்த்தி செய்யவும், ஒகேனக்கல் மூன்றாம் கட்டக் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு (Hogenakkal Phase-III Combined Water Supply Scheme) உறுதியளிக்கப்பட்ட ரூ.2,283.40 கோடி மத்திய நிதியை வழங்கவும் அவர் வலியுறுத்தினார்.
கல்வி நிதி விவகாரம் மற்றும் திருக்குறள் கோரிக்கை
‘ஒருங்கிணைந்த கல்வி’ (Samagra Shiksha) திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.3,284 கோடியை புதிய கல்விக் கொள்கையையோ (NEP) அல்லது மும்மொழிக் கொள்கையையோ அமல்படுத்த வற்புறுத்தாமல் எவ்வித நிபந்தனையுமின்றி மத்திய அரசு உடனடியாக விடுக்க வேண்டும் என்று முதல்வர் திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டார்.
நிறைவாக நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற விழுமியங்களுக்கு அடையாளமாகத் திகழும் தொன்மையான உலகப் பொதுமறையான ‘திருக்குறளை’ தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோரிக்கையையும் நித்தி ஆயோக் மன்றத்தில் முதல்வர் விஜய் முன்வைத்தார்.
“மாநிலங்கள் வலுப்பெறும்போது தான் இந்தியாவும் வலிமை பெறுகிறது; கூட்டுறவுக் கூட்டாட்சி தத்துவத்தின் மூலமே வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும்,” என்று கூறி தனது உரையை முதல்வர் நிறைவு செய்தார்.








