கோவை, June 4 : தமிழகத்தின் தொழில் தலைநகரமான கோவையில், உலகளாவிய உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் சர்வதேச தொழிற்துறை கண்காட்சி (INTEC) இன்று கொடிசியா (CODISSIA) வர்த்தக வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.இன்று முதல் தொடங்கி வரும் எட்டாம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இக்கண்காட்சி நடைபெற உள்ளது.உலகெங்கிலும் உள்ள அதிநவீன உற்பத்தித் தொழில்நுட்பங்கள், ஆட்டோமேஷன் உத்திகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான மேம்பாட்டு வாய்ப்புகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு இந்த பிரம்மாண்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 45 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் மட்டுமின்றி உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த 460-க்கும் மேற்பட்ட சர்வதேச அளவிலான முன்னணி நிறுவனங்கள் தங்களது நவீன தயாரிப்புகளுடன் பங்கேற்றுள்ளன.உலகளாவிய சந்தையில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப மாற்றங்களை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கும் பாலமாக இக்கண்காட்சி திகழ்கிறது.
தொழில்துறையின் அடுத்தகட்ட நகர்வாகக் கருதப்படும் அதிநவீன உற்பத்தி மற்றும் செயலாக்கக் கருவிகள் இங்கு பெருமளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக உலோகங்களை மிகத் துல்லியமாக வெட்டி வடிவமைக்கும் லேசர் கட்டிங் இயந்திரங்கள் (Laser Cutting Machines), மனித உழைப்பின் தேவையை குறைத்து உற்பத்தியை அதிகரிக்கும் ரோபட்டிக்ஸ் தொழில்நுட்பங்கள் (Robotics), மற்றும் கணினி வழி கட்டுப்பாட்டு உற்பத்தி முறைகளான சிஎன்சி இயந்திரங்கள் (CNC Machines) ஆகியவை இக்கண்காட்சியின் முக்கிய ஈர்ப்புகளாக அமைந்துள்ளன.இது தவிர தொழிற்சாலைகளில் மனிதத் தலையீடின்றி இயங்கும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நவீன உற்பத்தி முறைகள் மற்றும் தொழிற்துறை மேம்பாட்டுக்கான பல்வேறு புதிய மென்பொருட்களும் உபகரணங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
Also read: நெல்லை: கொள்ளை,போக்சோ வழக்குகளில் சிக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு
வளர்ந்து வரும் தொழில்முனைவோர், பாரம்பரிய உற்பத்தியாளர்கள், உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் பொறியியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு இக்கண்காட்சி ஒரு மிகச்சிறந்த அறிவுப் பகிர்வு தளமாக அமையும் என இதன் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய தொழில்நுட்பங்களை நேரடியாகக் கண்டு அறிந்துகொள்ளவும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கான வணிக ஒப்பந்தங்களை (B2B) ஏற்படுத்திக் கொள்ளவும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கவும் இது ஒரு அரிய வாய்ப்பாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கண்காட்சியின் முதல் நாளான இன்று, தமிழகத்தின் சென்னை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் வருகை புரிந்த ஏராளமான தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிறு தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் கண்காட்சியை மிகுந்த ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.உலகளாவிய தொழில்துறை சவால்களுக்கு மத்தியில் உள்நாட்டு உற்பத்தியை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கான உந்துதலை இந்த ஐந்து நாள் கண்காட்சி வழங்கும் என எதிர்பார்ப்பதாக கண்காட்சிக்கு வந்திருந்த தொழில் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.








