கீவ்,ஜூன் 4: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் இதுவரை இல்லாத அளவிலான மிகக் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.இரவு முழுவதும் நீடித்த இந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களில் இரண்டு சிறுவர்கள் உட்பட 22 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் 130-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

போர் தொடங்கி நீண்ட நாட்களாகியும் குறையாத வீரியத்துடன், ஒரே இரவில் 70-க்கும் மேற்பட்ட அதிநவீன ஏவுகணைகளையும், 650-க்கும் அதிகமான பல்வேறு வகை ட்ரோன்களையும் கொண்டு உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா நிலைகுலையச் செய்துள்ளது.இத்தாக்குதலைத் தொடர்ந்து மறுநாள் பகலிலும் மேலும் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
நகரங்களை உலுக்கிய வெடிச்சத்தங்கள்
தலைநகர் கீவ் (Kyiv) உட்பட டினிப்ரோ (Dnipro), கார்கிவ் (Kharkiv), ஜாப்போரிஜியா (Zaporizhzhia), போல்டாவா (Poltava), சுமி (Sumy) ஆகிய உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.தலைநகர் கீவில் ரஷ்யாவின் அதிநவீன ‘Kh-101’ ரக குரூஸ் ஏவுகணைகள் அடுத்தடுத்து அதிவேகத்தில் வந்து விழுந்து வெடிக்கும் புதிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.இரவு நேரத்து வானத்தைப் பிளந்து கொண்டு வந்த ஏவுகணைகளின் ஒளிக் கீற்றுகளும் அதைத் தொடர்ந்து நகரின் வான் எல்லையை ஒளிரச் செய்த சக்திவாய்ந்த குண்டுகளின் வெடிச்சத்தங்களும் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தின.
Also read : அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: இஸ்ரேல் தாக்குதலால் எண்ணெய் விலை அதிரடி உயர்வு!
பங்குச்சந்தை ஏற்றம்: மீண்டு வந்த குறியீடுகள்; முதலீட்டாளர்களுக்கான நிபுணர் ஆலோசனைகள்
இந்த கொடூரத் தாக்குதலில் உக்ரைனின் குடியிருப்பு வளாகங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகள் மற்றும் தலைநகர் கீவில் உள்ள ஒரு மருத்துவக் கிளினிக் ஆகியன கடுமையாகச் சேதமடைந்துள்ளன.உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குடியிருப்புப் பகுதிகளில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கத்திய உதிரிபாகங்களால் தயாரிக்கப்படும் ஆயுதங்கள்
ரஷ்யாவின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் உற்பத்திகள் அனைத்தும் இன்னும் வெளிநாட்டு உதிரிபாகங்களை நம்பியே இருக்கின்றன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அதிபர் ஜெலென்ஸ்கி பேசுகையில் “ரஷ்யா தற்போது நடத்தியுள்ள தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வகையான ட்ரோன்களும், ஏவுகணைகளும் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்கள் இல்லாமல் தயாரிக்கப்படவே முடியாது.இந்த ஒரே ஒரு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 650-க்கும் மேற்பட்ட ட்ரோன்களில் மட்டும் 17,000-க்கும் அதிகமான வெளிநாட்டு உதிரிபாகங்கள் உள்ளன.ரஷ்யா தன் மீதான சர்வதேசப் பொருளாதாரத் தடைகளைத் தகர்த்து இத்தகைய பெரும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.ரஷ்யாவுக்குப் பொருளாதாரத் தடைகளைத் தாண்ட உதவிக் கரங்களை நீட்டுபவர்கள் இந்தத் துயரமான மனிதப் படுகொலைகளுக்கு மறைமுகக் கூட்டாளிகள் ஆவர்” என்று மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவின் 5 ‘காலிபர்’ (Kalibr) ஏவுகணைகளில் 145 வெளிநாட்டு உதிரிபாகங்களும், 33 ‘இஸ்கந்தர்’ (Iskander) ஏவுகணைகளில் 122 வரையிலான வெளிநாட்டுப் பாகங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பிடிவாதம்
ஒருபுறம் உக்ரைன் இந்தத் தாக்குதலின் கோரப் பிடியில் சிக்குண்டுள்ள வேளையிலும், கிரெம்ளின் (Kremlin) மாளிகை போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தனது பழைய நிபந்தனைகளையே மீண்டும் முன்வைத்துள்ளது.மாஸ்கோ பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராகவே இருக்கிறது என்று கூறிய ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ரஷ்யாவின் பிராந்தியக் கோரிக்கைகளை உக்ரைன் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்றார்.
“இந்தப் போரை ஒரே நாளில் முடிவுக்குக் கொண்டு வர முடியும்.அதற்கு ஜெலென்ஸ்கி தனது ஆயுதப் படைகளை ரஷ்யா கோரும் பிராந்தியங்களிலிருந்து முழுமையாக வெளியேற உத்தரவிட வேண்டும்” என்று பெஸ்கோவ் பிடிவாதமாகத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களால் பெரும் மனித இழப்புகளையும் உள்கட்டமைப்புச் சிதைவுகளையும் சந்தித்து வரும் வேளையில், மாஸ்கோவோ உக்ரைன் ஏற்கனவே பலமுறை நிராகரித்த நிபந்தனைகளை மீண்டும் வற்புறுத்துகிறது








