சர்வதேச சந்தையில் எகிறும் கச்சா எண்ணெய் விலை அச்சம்: இந்தியாவுக்கு கை கொடுத்த அமெரிக்காவின் அதிரடி சலுகை!
புதுடெல்லி: உலகளவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் விநியோகத் தட்டுப்பாடு குறித்த கவலைகள் தீவிரமடைந்து வரும் சூழலில்,இந்தியாவுக்கு மிக முக்கிய நிம்மதியை அளிக்கும் வகையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் மீதான பொருளாதாரத் தடைகளுக்கான தளர்வை (Sanctions Waiver) அமெரிக்கா மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.கடந்த மே 16-ஆம் தேதியுடன் இந்த சலுகைக்காலம் காலாவதியான நிலையில்,சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.தற்போது வெளியாகியுள்ள அமெரிக்காவின் இந்த முடிவு,இந்தியாவின் தற்காலிக எரிசக்திப் பாதுகாப்பிற்கு மிக முக்கிய ஆதரவாகப் பார்க்கப்படுகிறது.
கடல் வழியாகக் கொண்டு வரப்படும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் (Seaborne Crude Oil) மற்றும் பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கே இந்த சிறப்புச் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள அமெரிக்க கருவூலத்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்,ஏற்கனவே கப்பல்களில் (Tankers) ஏற்றப்பட்டுவிட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் வர்த்தகத்திற்காக இந்த தற்காலிக பொது உரிமம் (Temporary General License) வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் இந்த துரித நடவடிக்கையின் மூலம்,உலக சந்தைக்கான ரஷ்ய எண்ணெய் விநியோகத்தில் உடனடியாக ஏற்படவிருந்த முட்டுக்கட்டைகள் மற்றும் தடைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
Also : விஜய் அரசியல் எழுச்சியால் அமித்ஷா அமைதி? தமிழக அரசியலில் புதிய கணக்கு
மே 16-ஆம் தேதிக்கு பிறகு இந்த தளர்வு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தபோது,இந்தியா உள்ளிட்ட பல இறக்குமதி நாடுகளில் எரிபொருள் விநியோகம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் குறித்து கடுமையான கவலைகள் எழுந்தன.உலக சந்தையில் ஏற்கனவே கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.ஒருவேளை அமெரிக்கா இந்த சலுகையை நீட்டிக்கத் தவறியிருந்தால்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்திருக்கும் என்று சந்தை வல்லுநர்கள் திட்டவட்டமாகக் குறிப்பிடுகின்றனர்.
ரஷ்யா – உக்ரைன் மோதல் தீவிரமடைந்த காலகட்டத்திற்குப் பிறகு,குறைந்த விலையில் கிடைத்த ரஷ்ய கச்சா எண்ணெய் இந்தியாவின் மிக முக்கியமான எனர்ஜி சோர்ஸாக மாறியது.இதன் காரணமாக ரஷ்ய எண்ணெய்யின் மீதான இந்தியாவின் சார்பு நிலையும் கணிசமாக உயர்ந்தது.இத்தகைய இக்கட்டான பொருளாதாரச் சூழலில்,அமெரிக்கா வழங்கியுள்ள இந்த பொருளாதாரத் தடை தளர்வு நீட்டிப்பு இந்தியாவுக்கு மிக முக்கிய குறுகிய கால நிவாரணமாக அமைந்துள்ளது.
இருப்பினும்,இந்த விவகாரத்தை உற்று நோக்கும் சர்வதேச அரசியல் பொருளாதார ஆய்வாளர்கள்,அமெரிக்கா இதனை இந்தியாவுக்குச் செய்யும் தனிப்பட்ட “உதவியாகவோ” அல்லது சலுகையாகவோ பார்க்க முடியாது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.உலகளாவிய எண்ணெய் சந்தையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயமும் அவசியமும் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது.உலக எண்ணெய் சந்தையில் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றால்,அமெரிக்கா இந்த தளர்வை வழங்கித்தான் ஆக வேண்டும் என்ற உலகளாவிய பொருளாதார நெருக்கடியே இந்த முடிவுக்குக் காரணம் என்று இந்தியா டுடே குளோபலின் பிரணாய் உபாத்யாய் விளக்கியுள்ளார்.
கடந்த காலங்களில் ரஷ்யா – உக்ரைன் மோதல் உச்சத்தில் இருந்தபோதும் அமெரிக்கா இதுபோன்ற தற்காலிக தளர்வுகளை வழங்கியிருந்தது.ஆனால்,டெனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு,ரஷ்ய எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.குறிப்பாக,இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை எதிர்த்து,வர்த்தக வரிகளை (Tariffs) விதிப்போம் என்ற எச்சரிக்கைகளும் அப்போது விடுக்கப்பட்டன.ஆனால்,தற்போதைய சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகள்,அமெரிக்காவையே மீண்டும் தனது நிலப்பாட்டை தளர்த்தி இந்த சலுகையை வழங்க வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
இந்தியாவின் பிரம்மாண்டமான தினசரி கச்சா எண்ணெய் தேவையும் இந்த சர்வதேச முடிவின் பின்னணியில் இருக்கும் மிக முக்கிய காரணியாகும்.உலக அளவில் கச்சா எண்ணெய்யைப் பயன்படுத்தும் மிக முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று.நாளொன்றுக்கு சுமார் 5 லட்சம் பேரல்கள் (5 Lakh Barrels) அளவுக்கு எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியாவின் இந்த மாபெரும் தேவையை,உலக சந்தையில் உடனடியாக வேறொரு மாற்று வழியைக் கொண்டு ஈடுகட்டுவது என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதற்கிடையில்,உலகளாவிய எனர்ஜி சப்ளை செயினில் (Energy Supply Chain) கடந்த சில காலமாகவே அழுத்தம் நீடித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி,உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தியாவின் முதன்மை எண்ணெய் ஏற்றுமதி நாடுகளாக விளங்கும் கத்தார்,ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளால்கூட தங்களது முழு கொள்ளளவிற்கு (Full Capacity) கச்சா எண்ணெய் கப்பல்களை அனுப்ப முடியாத இக்கட்டான சூழல் நிலவுகிறது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில்,இந்தியாவைப் போன்ற ஒரு மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாட்டிற்கு விநியோகத் தட்டுப்பாடு ஏற்பட்டால்,அதன் நேரடித் தாக்கம் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையை விண்ணைத் தொடச் செய்துவிடும்.இந்த விநியோகச் சங்கிலி உடைவதைத் தவிர்க்கவே,அமெரிக்கா இந்த தற்காலிக பொது உரிமத்தை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த தளர்வு நீட்டிப்பின் மூலம் இந்தியாவுக்கு உடனடியாக ஏற்படவிருந்த எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு அபாயம் தற்காலிகமாகக் குறைந்திருந்தாலும்,இது வெறும் 30 நாட்களுக்கான தற்காலிக அனுமதி மட்டுமே என்பதால்,இந்தியாவின் நீண்டகால எரிசக்தி உத்தி குறித்த புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியை ஒரே நாட்டைச் சார்ந்திராமல்,பிற நாடுகளுக்கும் பரவலாக்க வேண்டியதன் (Crude Oil Import Diversification) கட்டாயத்தை இந்த சூழல் மீண்டும் உணர்த்தியுள்ளது.








