திருவாரூர், May 18: “எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை இருப்பதால் இளைஞர்களுக்கு திருமணத்திற்கு பெண் தர மறுக்கிறார்கள்” என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் விசாலாட்சிபுரம் கிராம பெண்கள் திரண்டு வந்து மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குடியிருப்பு மற்றும் பள்ளிக்கு அருகே இயங்கி வரும் இந்த அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட மாவட்டகுடி ஊராட்சியில் அமைந்துள்ளது விசாலாட்சிபுரம் கிராமம்.300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில் இருந்து செருவாமணி பகுதிக்குச் செல்லும் சாலையோரத்தில், கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசு டாஸ்மாக் மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது.இந்த கடை அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே அரசு பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளாக தங்களுக்கு ஏற்பட்டு வரும் அவதி குறித்து விசாலாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் ஒன்றிணைந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்தனர்.தங்களது நீண்டநாள் வேதனையை அதிகாரிகளிடம் விவரித்த அவர்கள், இந்த டாஸ்மாக் கடையால் தங்களின் சமூக மற்றும் குடும்ப வாழ்க்கை எவ்வாறு சீரழிந்து போயுள்ளது என்பதை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டனர்.
குறிப்பாக, பெண்கள் முன்வைத்த ஒரு குற்றச்சாட்டு அங்கிருந்த அதிகாரிகளையும், சமூக ஆர்வலர்களையும் சிந்திக்க வைப்பதாக இருந்தது.”எங்கள் ஊரின் பெயரே இந்த டாஸ்மாக் கடையால் கெட்டுப்போய்விட்டது.வெளியூரில் இருந்து எங்கள் ஊர் இளைஞர்களுக்கு பெண் பார்க்க வருபவர்கள், ‘உங்கள் ஊரிலேயே டாஸ்மாக் கடை இருக்கிறதா?’ என்று கேட்டுவிட்டு திருமண வரனை நிராகரித்து விடுகிறார்கள்.இதனால் எங்கள் ஊர் இளைஞர்களுக்கு திருமணமே தள்ளிப்போகிறது” என்று கிராமத்துப் பெண்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர்.இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதுமட்டுமன்றி பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் தினமும் இந்த கடையைக் கடந்து செல்லும்போது பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.காலை மற்றும் மாலை நேரங்களில் மதுபிரியர்கள் கூட்டமாக அங்கு கூடுவதால் மாணவிகள் பாதுகாப்பாகச் செல்ல முடியாத சூழல் உருவாகி இருப்பதாக பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.சாலையோரத்தில் கூட்டமாக நின்று மது அருந்தும் நபர்கள் அந்த வழியாகச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளைக் கேலி கிண்டல் செய்வதாகவும் மாலை 6 மணிக்கு மேல் பெண்கள் தனியாக அந்தச் சாலையில் நடக்கவே பயப்படும் நிலை நீடிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் மது அருந்த வருபவர்கள் தங்களது வாகனங்களைச் சாலையின் இருபுறமும் கண்டபடி நிறுத்துவதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சாலையை மறித்துக்கொண்டு நிற்கும் மதுபிரியர்களிடம் ‘சற்று விலகுங்கள்’ என்று கெஞ்சிக் கேட்டுப் பாதையை வாங்கியே பெண்கள் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக விசாலாட்சிபுரம் கிராமத்திற்குள் சிற்றுந்துகள் மற்றும் மினி பஸ்கள் வரக்கூட ஓட்டுநர்கள் விரும்புவதில்லை என்ற மற்றொரு அதிர்ச்சித் தகவலையும் பொதுமக்கள் வெளியிட்டுள்ளனர்.இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் பொதுப் போக்குவரத்து வசதியின்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஏற்கனவே பலமுறை காவல்துறையிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது கிராம மக்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.மேலும் டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்திற்கு முன்பாகவே காலை வேளையிலேயே அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும் அவர்கள் தங்களது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.எனவே விசாலாட்சிபுரம் கிராம மக்களின் நலன் மற்றும் பெண்கள், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பள்ளி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே உள்ள மதுபான கடைகளை அகற்றக் கோரிப் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.







