சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில்,மாநிலத்தின் மின் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.சென்னை,கோயம்புத்தூர்,மதுரை,திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏர் கண்டிஷனர் மற்றும் குளிர்பதன சாதனங்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளதோடு,தொழிற்சாலைகளின் மின் தேவையும் கணிசமாக உயர்ந்துள்ளது.இந்தச் சூழ்நிலையில்,மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையைச் சமாளிப்பது மற்றும் மின் விநியோகத்தை தடையின்றி வழங்குவது குறித்த அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கியக் கூட்டத்தில், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மின்சார வாரியத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.தற்போதைய கோடை காலத்தில் நிலவி வரும் மின் நுகர்வு, மின் உற்பத்தி நிலையங்களின் செயல்திறன் மற்றும் வரும் வாரங்களில் ஏற்படப்போகும் கூடுதல் சவால்களை எதிர்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் மிக விரிவாக விவாதிக்கப்பட்டது.
Also read : திருமா உடைத்த உண்மை? திமுக பதில் என்ன!
குறிப்பாக,தமிழக அரசின் முக்கிய மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றான 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.கோடை காலத்தில் வீட்டு உபயோக மின்சாரப் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதால்இந்த இலவச மின்சாரத் திட்டத்தினால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச்சுமை மற்றும் அதன் தற்போதைய செயல்திறன் நிலவரம் குறித்து அதிகாரிகள் முதலமைச்சரிடம் விளக்கமளித்தனர்.பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் இந்தத் திட்டத்தைத் தொய்வில்லாமல் கொண்டு சேர்க்கும் அதே வேளையில் மின்சார வாரியத்தின் நிதிநிலையைச் சமமாகப் பேணுவது குறித்தும் அதற்கான அடுத்தகட்ட அரசின் அணுகுமுறைகள் குறித்தும் பொருளாதார மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மற்றொரு முக்கியச் சவாலாக தமிழகத்தில் இயற்கை எரிவாயுவை நம்பி இயங்கி வரும் சில மின் உற்பத்தி நிலையங்களில் நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாடு குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.இந்த எரிவாயு தட்டுப்பாட்டால் மின் உற்பத்தியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்தும் அதைக் கையாள்வதற்கான வழிமுறைகள் அடங்கிய விரிவான அறிக்கையையும் அதிகாரிகள் முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர்.கோடை காலத்தில் எந்தச் சூழலிலும் மின்சார உற்பத்தி தடைபடக் கூடாது என்பதால் அதற்கு மாற்றாக வேறு எரிபொருட்களைப் பயன்படுத்துவது தேவைப்பட்டால் தனியாரிடமிருந்து மின் கொள்முதல் செய்வது மற்றும் முறையான மின் பகிர்வு மேலாண்மையைக் கையாள்வது போன்ற தற்காலிக மற்றும் அவசரகால திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மின் உற்பத்தியை பெருக்குவது ஒருபுறமிருக்க மாநிலத்தின் மின் பரிமாற்றம் மற்றும் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில் தேவையற்ற மின்வெட்டுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பது தொழிற்சாலைகளுக்குத் தடையற்ற முறையில் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வது மற்றும் நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மின் விநியோகக் கட்டமைப்பை விரிவாக்கம் செய்வது போன்ற பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நீண்ட காலத் திட்டமாக தமிழகத்தின் மின் தேவையை நிரந்தரமாகச் சமாளிக்க சூரிய மின்சாரம் மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்கட்டமைப்புகளை மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அதற்கான முதலீடுகள் குறித்தும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.








