
Chennai , May 12 : விவசாயிகள் சந்திப்பு : தமிழக முதல்வர் விஜயை சந்தித்த ஐயாகண்ணு தலைமையிலான விவசாயிகள், 317 கோடி ரூபாய் நிலுவை தொகை மற்றும் கடன் தள்ளுபடி கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழக அரசியல் மற்றும் விவசாய வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்த சந்திப்பாக, தேசிய தென்னிந்திய வேலி இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் ஐயாகண்ணு தலைமையிலான விவசாயிகள் குழு இன்று தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. குறிப்பாக, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு தொடர்பான 317 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இந்த சந்திப்பின் மையப்புள்ளியாக அமைந்துள்ளது.
317 கோடி நிலுவை தொகை விவகாரம் : சென்னையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நெல் கொள்முதல் தொகை, விவசாயிகளின் கடன் சுமை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு போன்ற பல முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐயாகண்ணு தலைமையிலான விவசாயிகள் தரப்பில் பேசப்பட்ட முக்கிய அம்சம், National Consumer Cooperative Federation (NCCF) தொடர்பான நிலுவைத் தொகை பற்றியது. விவசாயிகள் வழங்கிய தகவலின்படி, நெல் கொள்முதல் செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்தும், அதற்கான பணம் முழுமையாக வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், “டிபிசி மூலம் நெல் கொடுத்தால் மூன்று நாட்களில் பணம் கிடைக்கிறது. ஆனால் NCCF மூலம் கொடுக்கப்பட்ட நெலுக்கான தொகை இன்னும் கிடைக்கவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மொத்தமாக சுமார் 317 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும், சிலர் 500 கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கான தொகை தாமதமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
முதல்வர் விஜயிடம் நேரடி மனு ; இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், விவசாயிகள் நேரடியாக முதல்வர் விஜயிடம் மனு அளித்துள்ளனர். மத்திய அரசிடம் தேவையான நடவடிக்கை எடுத்து, நிலுவைத் தொகையை விரைந்து பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சந்திப்பின் போது விவசாயிகள் தரப்பில், “ஒரு நாடு உண்மையில் பலம் வாய்ந்த நாடாக இருக்க வேண்டுமெனில் அது உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும். உணவுக்காக வெளிநாடுகளை நம்பும் நிலை வந்தால் அது வலிமையான நாடு அல்ல” என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.
இந்த உரையாடலில் விவசாயிகளின் பொருளாதார நெருக்கடி, உற்பத்தி செலவுகள் உயர்வு மற்றும் விலை ஆதரவு குறைபாடு ஆகியவை பற்றியும் விரிவாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
கடன் தள்ளுபடி கோரிக்கை மீண்டும் முன்வைப்பு
விவசாயிகளின் மற்றொரு முக்கிய கோரிக்கையாக கடன் தள்ளுபடி விவகாரம் இருந்தது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் லாபகரமான விலை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு இரு மடங்கு லாபகரமான விலை வழங்கப்படும் என்று முன்பு உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்று விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கான பணத்தையே பெற முடியாத சூழ்நிலை உள்ளது” என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் வழங்கிய உத்தரவு
இந்த சந்திப்பில், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை அழைத்து விவசாயிகளின் நிலுவைத் தொகை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், “15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த விவசாயிகள், தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் தரப்பில் சுமார் 200 பேர் இந்த போராட்டத்திற்காக தயாராக இருந்ததாகவும், முதல்வரின் உறுதியை தொடர்ந்து அவர்கள் அமைதியாக திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.








