
சென்னை ,ஏப்ரல் 4 : தமிழகத்தில் ஊடகச் சுதந்திரம் ,அரசியல் தளம் மற்றும் நீதித்துறைச் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் ,பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பழைய நேர்காணல் விவகாரத்தில் ஒரு புதிய சட்டப்பூர்வ திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான ஒரு குறிப்பிட்ட பேட்டி தொடர்பாக ,தற்போதைய தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகியும் ,ரெட் பிக்ஸ் (RedPix) யூடியூப் சேனலின் தொகுப்பாளருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் சுயமாக முன்வந்து (Suo Motu) நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடங்கியுள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி-ஸ்கொயர் (G-Square) தொடர்பான வழக்கில் ,சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்திருந்த உத்தரவை தவறாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் ,நீதிமன்ற வழிகாட்டுதலை மீறும் வகையிலும் அந்த நேர்காணல் அமைந்திருந்ததாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தடையுத்தரவு நடைமுறையில் இருந்தபோது ,அதைப்பற்றி சவுக்கு சங்கரும் ,அந்த நேர்காணலைத் தொகுத்து வழங்கிய ஃபெலிக்ஸ் ஜெரால்டும் பேசிய கருத்துகள் ,நீதிமன்ற உத்தரவை நேரடியாக அவமதிக்கும் வரம்பிற்குள் வருவதாக நீதிபதி கே. குமரேஷ் பாபு தலைமையிலான அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்ந்த அவதூறு வழக்கில் ,சவுக்கு சங்கர் அந்நிறுவனம் குறித்து பொதுவெளியில் பேசவோ அல்லது எழுதவோ இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் 2023 ஆம் ஆண்டில் இந்த உத்தரவில் சில மாற்றங்களைச் செய்த நீதிமன்றம் ,சம்பந்தப்பட்ட நிறுவனம் குறித்து சவுக்கு சங்கர் ஏதேனும் கருத்துகளைப் பதிவு செய்ய விரும்பினால் ,அதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக மின்னஞ்சல் மூலம் நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தி ,அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என்றும் ,பதில் வராத பட்சத்தில் மட்டுமே செய்தியை வெளியிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது.
இந்த நிலையில் ,2024 இல் சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு இடையே நடந்த நேர்காணலின் எழுத்துப்பூர்வமான ஆவணம் (Transcript) நீதிமன்ற விசாரணையின் போது தாக்கல் செய்யப்பட்டது. அதில் ,தன்னிடம் ஜி-ஸ்கொயர் நிறுவனம் குறித்து யாராவது கேள்வி கேட்டால் ,அதற்கு உடனே பதிலளிக்க வேண்டுமா அல்லது 72 மணி நேரம் காத்திருக்க வேண்டுமா என்று சவுக்கு சங்கர் கேலியாக வினவ ,அதற்குப் பதிலளித்த தொகுப்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டும் ,”நீதிமன்ற உத்தரவை அப்படிப் புரிந்து கொள்ள முடியாது” என்று தனது சொந்தக் கருத்தைக் கூறியிருந்தார். நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவை தங்களின் விருப்பப்படி தவறாக வியாக்கியானம் செய்து ,நேரலையில் அதனை நிராகரிக்கும் தொனியில் பேசியது அப்பட்டமான விதிமீறல் என நீதிமன்றம் கருதுகிறது.







