பிரான்ஸ் ,ஜுன் 18 : பிரான்சின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 உச்சிமாநாட்டின் இடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்தித்துப் பேசினர். இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கு மிக முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இருக்கும் வரை இந்தியாவை நோக்கி எந்தவொரு நாடு தாக்குதல் நடத்த முற்பட்டாலும் அமெரிக்கா முதல் நாடாக களமிறங்கி இந்தியாவைப் பாதுகாக்கும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

மேற்காசியப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட பதற்றத்தின்போது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மூன்று இந்திய மாலுமிகளின் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். கடல்சார் வர்த்தகப் பாதைகளின் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர் மாலுமிகளின் தொழில் மிகவும் சவாலானது என்றும் இக்கட்டான இக்காலகட்டத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
also : உலகின் மிக வயதான தலைவர்கள் பட்டியல்: 80 வயதைத் தொட்ட அதிபர் ட்ரம்ப் !யார் முதலிடத்தில் உள்ளார் ?
பிரதமர் நரேந்திர மோடி தனது நீண்ட கால நண்பர் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அதிபர் டிரம்ப் அவரைத் தனது சொந்த பாணியில் பாராட்டிப் பேசினார். பிரதமர் மோடி பார்ப்பதற்கு ஒரு தேவதூதன் போல மென்மையாகத் தெரிந்தாலும் நிர்வாகத்திலும் நாட்டின் பாதுகாப்பிலும் அவர் மிகவும் கண்டிப்பானவர் என்று டிரம்ப் வர்ணித்தார். தற்போதைய உலகளாவிய சூழலில்,குறிப்பாக மேற்காசிய விவகாரங்களில் அமைதியை நிலைநாட்டுவதில் மோடி தலைமையிலான இந்திய அரசு மிக முக்கிய பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவுக்கு ஏதேனும் ஆபத்தோ அல்லது அச்சுறுத்தலோ நேர்ந்தால் அவர்களைப் பாதுகாக்கும் அரணாக அமெரிக்கா நிச்சயம் முன்னிற்கும் என்றும் டிரம்ப் உலக நாடுகளுக்குத் தெளிவுபடுத்தினார்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் குறித்துப் பேசிய அதிபர் டிரம்ப் இரு நாடுகளும் ஒரு புதிய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட மிக நெருங்கிவிட்டதாகத் தெரிவித்தார். பிரதமர் மோடியைத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இரு நாடுகளுக்கும் சாதகமான இந்த வர்த்தக ஒப்பந்தம் எவ்வித தடங்கலும் இன்றி நிச்சயம் வெற்றிகரமாக முடிவுக்கு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை நிலவரம் குறித்துப் பேசிய டிரம்ப் தற்போதைய சூழலில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்தச் சாதகமான போக்கின் காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்னும் சில தினங்களில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பிருந்த சுமுகமான நிலையை மீண்டும் எட்டிவிடும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.







