தஞ்சாவூர் ,ஜூன் 17 : கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் சிக்கி உயிர் தப்பிய மாணவி,22 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது இடம் பிடித்து அரசு அதிகாரியாக சாதனை படைத்துள்ளார். அவர் ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநராக (ஏ.டி. பஞ்சாயத்து) விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளியில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 94 மாணவ,மாணவிகள் கருகி உயிரிழந்தனர். ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தின் போது,ஜெனிபர் என்ற மாணவி அங்கு நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். விபத்து நடந்த அன்று காலை 10:30 மணியளவில் பள்ளி வளாகமே தீப்பற்றி எரிந்த சூழலில்,தனது தம்பி,அத்தை பிள்ளைகள் மற்றும் தெருவில் வசிக்கும் சக குழந்தைகளை பத்திரமாக மீட்பதே ஜெனிபரின் அன்றைய முதன்மை நோக்கமாக இருந்தது. பிற்காலத்தில்,யாரோ ஒருவரின் அலட்சியத்தால் தான் இத்தனை குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்பதை உணர்ந்த ஜெனிபர்,நிர்வாகத்தில் நிலவும் அலட்சியங்களை போக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கினார்.
also : தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
அன்றைய காலகட்டத்தில் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்ட அப்போதைய மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணனின் செயல்பாடுகளே ஜெனிபரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன. மாவட்ட ஆட்சியரின் ஒரு கையெழுத்தால் தங்களுக்கு கல்விக்கட்டணம் ரத்து செய்யப்பட்டதும்,தடையின்றி புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் கிடைத்ததும்,அதிகாரமிக்க பதவியில் இருந்தால் பொதுமக்களின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அந்த சிறுவயதிலேயே ஜெனிபர் கற்றுக்கொண்டார். அன்று முதல் அரசு அதிகாரியாக வேண்டும் என்ற கனவு அவரிடம் விதைக்கப்பட்டது.
அரசுப் பணிக்கான இவரது ஒன்பது ஆண்டுகால நீண்ட நெடிய போராட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கியது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பப் பின்னணியைக் கொண்ட ஜெனிபரால்,ஆரம்பக் கட்டத்தில் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பயிற்சி மையங்களுக்குச் சென்று படிக்க இயலவில்லை. தகுந்த வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் தேர்வு முடிவுகள் தள்ளிப்போனாலும்,அவர் தனது முயற்சியைக் கைவிடவில்லை. இந்த நிலையில்,2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான கல்வி உதவித்தொகை இவருக்குக் கிடைத்தது. இதன் மூலம் சென்னை அடையாறில் உள்ள அரசுப் பயிற்சி மையத்தில் (எஸ்டிஐ) தங்கி எட்டு மாதங்கள் தீவிரமாகப் படித்தார்.
முன்னதாக,கடந்த 2025-ஆம் ஆண்டு நடந்த குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று வணிகவரித் துறையில் துணை வணிகவரி அதிகாரியாக (டி.சி.ஓ) பணியில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து,2026-ஆம் ஆண்டு வெளியான குரூப்-1 தேர்வு முடிவுகளில் மாநில அளவில் 15-வது இடத்தைப் பிடித்து,தற்போது ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காக இந்தத் துறையில் சிறப்பாகச் செயல்படப் போவதாகக் கூறும் ஜெனிபர்,இத்துடன் தனது பயணத்தை நிறுத்தப் போவதில்லை என்றும்,இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரியாவதே தனது இறுதி இலக்கு என்றும் உறுதியுடன் தெரிவிக்கிறார்.
கும்பகோணம் விபத்திற்குப் பிறகு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கூரைக்கொட்டகைகள் அகற்றப்பட்டு கான்கிரீட் கட்டடங்களாக மாற்றும் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய ஜெனிபர்,தற்போது தீ விபத்துகள் குறைந்திருந்தாலும்,பள்ளிச் சுவர் இடிந்து விழுவது மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் போன்ற வேறு வடிவங்களில் பாதிப்புகள் தொடர்வதாக கவலை தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை இன்னும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு,குழந்தைகளுக்குப் படிப்பை விட அவர்களின் உயிருக்கு முன்னுரிமை அளிக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்று ஒரு அதிகாரியாக அவர் வலியுறுத்துகிறார். பெரும் துயர வடுக்களில் இருந்து மீண்டு,விடாமுயற்சியால் அரசு அதிகாரியாக உயர்ந்திருக்கும் ஜெனிபரின் இந்த சாதனை,போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் பலருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.








