வேலூர் ,ஜூன் 16 : வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த மேல்பட்டி பகுதியில் ,ஆறு வயது சிறுவன் ஒருவன் அவனது பாட்டி வீட்டிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதலில் இந்த மரணம் நரபலியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் ,காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் ,சொந்த அத்தையே அந்தச் சிறுவனை தோசைக்கரண்டியால் அடித்துக் கொலை செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

மேல்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் ஆசா தம்பதியினரின் ஆறு வயது மகன் முகிலன் ,கடந்த நாற்பது நாட்களாக மேல்பட்டியில் வசித்து வரும் அவனது பாட்டி விஜயாவின் வீட்டில் தங்கி வளர்ந்து வந்துள்ளான். இந்நிலையில் ,நேற்று முன்தினம் சிறுவன் முகிலன் உடலில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் சடலமாகக் கிடந்துள்ளான். சிறுவனின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் ,அவனது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மேல்பட்டி காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் கொடுத்தனர்.
also : வேலூர் சிறுவன் மர்ம மரணம்: மாந்திரீக நரபலியா? போலீசார் தீவிர விசாரணை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ,சிறுவன் முகிலனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ,உயிரிழந்த சிறுவனின் பாட்டி விஜயாவும் ,அவரது மகள் ரேவதியும் நீண்ட நாட்களாக மாந்திரீகப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை அமாவாசை நாள் என்பதால் ,சிறுவனை அவர்கள் நரபலி கொடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்த நரபலி கோணம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.
பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து மேல்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். சந்தேகத்தின் அடிப்படையில் சிறுவனின் அத்தை ரேவதியிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ,நரபலி சந்தேகத்தைத் தாண்டி முற்றிலும் அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்தன. ராஜேஷ் மற்றும் ஆசா தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்பக் கருத்து வேறுபாட்டிற்கு இந்தச் சிறுவனே காரணம் என ரேவதி கருதியுள்ளார். நீ பிறந்த நேரம்தான் என் தம்பியும் அவன் மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் ,கடந்த சில நாட்களாகவே அந்தப் பிஞ்சு குழந்தையை ரேவதி கடுமையான முறையில் சித்திரவதை செய்து வந்துள்ளார்.
இதன் உச்சக்கட்டமாக ,சம்பவத்தன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் முகிலனை ரேவதி கோபத்துடன் பிடித்து ,சமையலறையில் இருந்த தோசைக்கரண்டியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். ரேவதியின் இந்தத் கொடூரத் தாக்குதலில் நிலைகுலைந்த சிறுவன் ,உடலில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து ,பெற்ற அண்ணனின் மகனையே அடித்துக் கொலை செய்த குற்றத்திற்காக அத்தை ரேவதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாந்திரீகப் பின்னணி குறித்த சந்தேகங்களுக்கு மத்தியில் ,குடும்பப் பகையினால் சொந்த அத்தையே ஆறு வயதுக் குழந்தையைத் அடித்துக் கொலை செய்துள்ள இந்த கொடூரச் சம்பவம் குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன








