சென்னை , ஜூன் 16: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை 75,000 ரூபாயாக உயர்த்தி முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே 50,000 ரூபாய் வரை மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போதைய புதிய உத்தரவின்படி இந்த வரம்பு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. காவேரி டெல்டா பகுதி விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் முன்வைத்த தொடர் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களின் பின்னணியில் முந்தைய அரசாணை ரத்து செய்யப்பட்டு இந்த புதிய திருத்தப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழக அரசுக்கு சுமார் 5,932 கோடி ரூபாய் (கிட்டத்தட்ட 6,000 கோடி ரூபாய்) கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

முதலமைச்சரின் இந்த புதிய அறிவிப்பின்படி கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் இனி அந்தத் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. அதேநேரம் 75,000 ரூபாய்க்குக் கூடுதலாகக் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. உதாரணமாக ஒரு விவசாயி ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தால் அவருக்கு அதிகபட்சமாக 35,000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். மீதமுள்ள 40,000 ரூபாய் மற்றும் அதற்கான வட்டித் தொகையை சம்பந்தப்பட்ட விவசாயி கூட்டுறவு வங்கியில் மீண்டும் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முன்னதாக 50,000 ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு வெறும் 5,000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி என்ற நிபந்தனை இருந்ததால் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதனை மாற்றியமைக்கும் விதமாகவே இந்த 35,000 ரூபாய் தள்ளுபடி என்ற புதிய வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நிதிநிலை: இன்று மாலை வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதி அமைச்சர் மரிய வில்சன்
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த விரிவான புள்ளிவிவரங்களை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 75,000 ரூபாய்க்குக் கீழ் கடன் பெற்று முழுமையான தள்ளுபடி வரம்பிற்குள் வரும் பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 22,2 ஆகும். இவர்களுக்காக அரசு ஏற்கும் கடன் தொகை 3,058 கோடியாகும். இதில் மிகக் குறிப்பாக 5 லட்சத்து 22,000 குறு விவசாயிகள் பெற்றுள்ள 2,511 கோடி ரூபாயும் 94,720 சிறு விவசாயிகள் பெற்றுள்ள 520 கோடி ரூபாயும் அடங்கும். இதுதவிர இதர பெரு விவசாயிகள் பிரிவைச் சேர்ந்த 4,753 பேருக்கு 26 கோடி ரூபாய் அளவிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
மறுபுறம் 75,000 ரூபாய்க்குக் மேல் கடன் பெற்று பகுதி தள்ளுபடி வரம்பிற்குள் வரும் விவசாயிகளின் விவரங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரம்பில் சுமார் 3 லட்சத்து 10,000 குறு விவசாயிகள் கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் அளவிற்கும் 4 லட்சத்து 21,000 சிறு விவசாயிகள் 1,475 கோடி ரூபாய் அளவிற்கும் கடன் பெற்றுள்ளனர். இவர்களுடன் 88,000 பெரு விவசாயிகள் பெற்ற 310 கோடி ரூபாயும் இதில் அடங்கும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பகுதி தள்ளுபடி பிரிவில் குறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை 3,500 கோடியாகவும் சிறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை 1,900 கோடியாகவும் அமையவுள்ளது.
இந்த பயிர்க்கடன் தள்ளுபடியானது அனைத்துக் காலக் கடன்களுக்கும் பொருந்தாது என்ற முக்கியமான நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி முதல் நடப்பு 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட குறுகிய காலப் பயிர்க்கடன்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும். இதனால் கடந்த 2024ஆம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளில் கடன் பெற்று பல ஆண்டுகளாகத் திருப்பிச் செலுத்தாமல் வைத்துள்ள நீண்டகாலக் கடனாளிகளுக்கு இந்தத் தள்ளுபடி எவ்விதத்திலும் உதவாது. அவர்கள் தங்களின் பழைய நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்த வேண்டும்.
குறிப்பிட்ட இந்த ஓராண்டு கால வரம்பிற்குள் குறுகிய காலப் பயிர்க்கடன் பெற்ற ஒட்டுமொத்த விவசாயிகள் மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை 14 லட்சத்து 43,504 ஆக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் ஐந்து பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களின் போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுந்ததை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தற்போதைய பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பு உயர்வு விவசாயிகளுக்குச் சாதகமாக இருந்தாலும் அரசுக்கு மிகப்பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் காரணியாகவே பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.








