மதுரை, June 12 : நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் காவலர்கள் ஐந்து பேரின் ஏ-கிளாஸ் (முதல் வகுப்பு) சிறை வசதி கோரிய மனுவை மதுரை நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ஆம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு நடத்தப்பட்ட கொடூர தாக்குதலால் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு நீதிமன்றம் அண்மையில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த வழக்கில் முதன்மை குற்றவாளிகளான முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பாய்வாளர் ரகு கணேஷ் மற்றும் காவலர்கள் செல்லதுறை, சாமதுரை, வெயில்முத்து ஆகிய ஐந்து பேரும் தங்களுக்கு சிறையில் ஏ-கிளாஸ் எனப்படும் முதல் வகுப்பு சிறை வசதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். முன்னாள் காவலர்கள் என்ற அடிப்படையில் தங்களுக்கு இந்த சிறப்பு வசதி வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருந்தது.
இந்த மனு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த ஐந்து முன்னாள் காவலர்களுக்கும் ஏ-கிளாஸ் வகுப்பு சிறை வசதி எதையும் வழங்க முடியாது என்று கறாராகக் கூறி அவர்களின் மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தங்களுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த முன்னாள் காவலர்களுக்குப் பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.








