சிவகங்கை , ஏப்ரல் 10 : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்தபோது அங்கே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றாமல் வேட்பாளரை மட்டும் அறிமுகம் செய்துவிட்டுச் சென்றது களத்தில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு த.வெ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் மாநிலம் தழுவிய தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக காரைக்குடியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே இந்த கூட்டத்தை நடத்துவதற்குத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் பிரசாரப் பயணத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக த.வெ.க தலைவர் விஜய் தனக்கு ஒதுக்கப்பட்ட அனுமதி நேரம் கடந்தே காரைக்குடி எல்லைக்குள் நுழைந்தார். காலை முதலே வெயிலையும் பொருட்படுத்தாமல் காரைக்குடி புதிய பேருந்து நிலையப் பகுதியில் குவிந்திருந்த தொண்டர்களும் ரசிகர்களும் அவரது வருகைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.
ராஜ்யசபா எம்பியாக நிதிஷ் குமார் பதவியேற்பு: வாழ்த்திய பிரதமர் மோடி
காரைக்குடியில் விஜய் பிரச்சாரம்: 37 நிபந்தனைகள் விதித்த போலீஸ், பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமை
இதற்கிடையே காரைக்குடி நகருக்குள் வந்த வழியில் விஜய் திடீரென தனது பிரசாரக் காரை நிறுத்தச் சொல்லி அதிலிருந்து கீழே இறங்கினார். பின்னர் அங்கிருந்த சைக்கிள் ஒன்றை வாங்கி அவர் திடீரென சாலையில் ஓட்டிச் சென்றார். தங்களின் தலைவர் எதிர்பாராத விதமாகச் சைக்கிளில் வருவதைக் கண்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இதனால் அந்த பகுதியில் திடீர் போக்குவரத்து நெரிசலும் சிறிய பரபரப்பும் ஏற்பட்டது. விஜய் சைக்கிள் ஓட்டிய இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் உடனடியாகப் பரவி அவரது பிரசார பாணியாக விவாதிக்கப்பட்டாலும் காவல்துறையினருக்குப் பாதுகாப்பு வழங்குவதில் கூடுதல் சவாலை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பிரசார வாகன மேடைக்கு வந்த விஜய் கட்சியின் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாகத் தொண்டர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். கட்சியின் தேர்தல் சின்னமான ‘விசில்’ சின்னம் பொறிக்கப்பட்ட பதாகையைக் கைகளில் ஏந்தி அங்கிருந்த மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கே திரண்டிருந்த மக்கள் அவர் பேசுவார் என்று ஆவலோடு மைக்ரோஃபோன் முன் காத்திருந்த சூழலில் அவர் எந்தவித உரையும் நிகழ்த்தாமல் அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.
தேர்தல் பிரசாரக் களத்தில் ஒரு கட்சியின் முதன்மைத் தலைவர் நேரடியாகத் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுவது மட்டுமே வாக்கு வங்கியை உறுதிப்படுத்தும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் விஜய் மேடை ஏறியும் பேசாமல் அமைதியாகக் கடந்து சென்றது பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த மூத்த நிர்வாகிகளையும் தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததால் தேர்தல் நடத்தை விதிகளின்படி எழும் சட்டப் சிக்கல்களைத் தவிர்க்கவே விஜய் பேசாமல் சென்றதாக ஒருதரப்பினர் கூறினாலும் முன்கூட்டியே திட்டமிடல் இல்லாத பிரசார நிர்வாகமே இதற்குக் காரணம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.







