குளிர்காலமும் முதியோர் நலனும்: சளி, மூட்டு வலியை விரட்டும் ‘சூப்பர்’ உணவுகள்!

குளிர்காலமும் முதியோர் நலனும்: சளி, மூட்டுவலியை விரட்டும் ‘சூப்பர்’ உணவுகள்!

சென்னை : நவம்பர் 30: 2025 குளிர்காலம் தொடங்கிவிட்டாலே முதியவர்களுக்கு மூட்டு வலி, செரிமானக் கோளாறு மற்றும் சளித் தொல்லைகள் அதிகரிப்பது வழக்கம். வயது முதிர்வின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் வேளையில், இந்த பருவநிலை மாற்றம் அவர்களை எளிதில் பாதிக்கும். “உணவே மருந்து” என்ற அடிப்படையில், இந்த குளிர்காலத்தில் முதியவர்கள் தங்கள் உடல் நலத்தைப் பாதுகாக்க என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைகளை இங்கே காணலாம்.
உடல் வெப்பத்தை தக்க வைக்கும் உணவுகள்
குளிர்காலத்தில் உடலின் வெப்பநிலையை சீராக வைப்பது மிக முக்கியம். இதற்குச் சிறுதானியங்கள் பெரிதும் உதவுகின்றன.

கம்பு மற்றும் ராகி இவை உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தருவதுடன், இதில் உள்ள கால்சியம் முதியவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானத்தைக் குறைக்க உதவும். ராகி களி அல்லது கம்பு கூழ் (மிதமான சூட்டில்) மதிய வேளையில் எடுத்துக் கொள்ளலாம்.

எள் எள்ளுருண்டை அல்லது எள் கலந்த உணவுகள் உடல் சூட்டை அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…
குளிர்காலத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல் மற்றும் சளியிலிருந்து தற்காத்துக்கொள்ள, அன்றாட சமையலில் பின்வரும் பொருட்களைச் சற்று அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்:
இஞ்சி மற்றும் பூண்டு: இவை இரண்டும் செரிமானத்தை சீராக்குவதுடன், நெஞ்சு சளியைக் கரைக்கும் வல்லமை கொண்டவை. இஞ்சி தேநீர் அல்லது பூண்டு பால் அருந்துவது நல்லது.

மஞ்சள் மற்றும் மிளகு: பாலில் சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து இரவில் குடிப்பது தொண்டை கரகரப்பை நீக்கி, நிம்மதியான உறக்கத்தைத் தரும்.
சூப் வகைகள் அவசியம்
முதியவர்களுக்குப் பற்கள் வலுவிழந்திருக்க வாய்ப்புள்ளதால், எளிதில் செரிமானம் ஆகக்கூடிய திரவ உணவுகள் சிறந்தது.

காய்கறி சூப்: கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் கலந்த சூப்பில் மிளகுத் தூள் தூவி மாலை வேளையில் குடிக்கலாம்.

முருங்கைக்கீரை சூப்: இது இரும்புச்சத்து நிறைந்தது மற்றும் மூட்டு வலிக்குச் சிறந்த நிவாரணி. வாரம் இருமுறை இதைச் சேர்த்துக் கொள்ளலாம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்
“குளிர்காலத்தில் பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும்” என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால், வைட்டமின் சி நிறைந்த பழங்களே நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். குறிப்பாக
நெல்லிக்காய்: தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது அல்லது சாறாகக் குடிப்பது நல்லது.
ஆரஞ்சு மற்றும் கொய்யா: இவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இவற்றை மதிய வேளையில் சாப்பிடுவது உத்தமம்.
பசலைக்கீரை மற்றும் வெந்தயக்கீரை உடலுக்குத் தேவையான நார்ச்சத்தைத் தரும்.

தவிர்க்க வேண்டியவை எவை?
முதியவர்கள் குளிர்காலத்தில் பின்வரும் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது:

*குளிர்சாதன பெட்டியில் (Fridge) வைத்த குளிர்ந்த நீர் மற்றும் உணவுகள்.

  • மைதா சார்ந்த பரோட்டா, நான் போன்ற உணவுகள் (செரிமானத்தை பாதிக்கும்).

*அதிகப்படியான எண்ணெய் பலகாரங்கள்.

*இரவு நேரத்தில் தயிர், மோர் மற்றும் குளிர்ச்சி தரும் பழங்கள்.

பெட்டிச் செய்தி தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்.. குளிர்காலத்தில் தாகம் அதிகம் எடுக்காது என்பதால், முதியவர்கள் தண்ணீர் குடிப்பதை வெகுவாகக் குறைத்து விடுவார்கள். இது உடலில் வறட்சி மற்றும் மலச்சிக்கலை உண்டாக்கும். எனவே, தாகம் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது வெதுவெதுப்பான நீர் அருந்துவது அவசியம். ஒரு நாளைக்குக் குறைந்தது 2 லிட்டர் வெதுவெதுப்பான நீர் பருகுவதை உறுதி செய்ய வேண்டும். – நமது நிருபர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »