நெல்லை, நவம்பர் 12, 2025 – “எந்த சூழல் வந்தாலும் தமிழக வாக்காளர்கள் திமுக அரசுக்கே வாக்களிக்க தயாராக உள்ளனர். 2.0 முதலமைச்சராக மீண்டும் ஸ்டாலின் வருவார்” என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.




ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி தமிழகத்தில்
இந்தியா, அர்ஜென்டினா, சீனா, நியூசிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளிட்ட 24 நாடுகள் கலந்து கொள்ளும் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நவம்பர் 28ஆம் தேதி முதل் டிசம்பர் 10ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை ஆகிய ஊர்களில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்துடன் இணைந்து நடத்துகிறது.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கான உலகக் கோப்பையை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகம் செய்வதற்கான வாகன குழு பயணம் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி இன்று அந்த வாகன குழு நெல்லை வந்தது.
நெல்லையில் கோப்பை அறிமுக விழா
நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் உலகக் கோப்பை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஆட்சியர் சுகுமார் தலைமையில் நடந்த நிகழ்வில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து போட்டிக்கான காங்கேயம் காளை லோகாவையும் அறிமுகம் செய்து வைத்தார்.
தேர்தல் ஆணையம் மோசடி ஆணையம் – அப்பாவு குற்றச்சாட்டு
பின்னர் சபாநாயகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
13 முறை வாக்காளர் திருத்தம் விவகாரம்
ஒன்றிய நிதியமைச்சர் 13 முறை வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நடத்துள்ளதாக கூறியுள்ளதற்கு பதில் அளித்த சபாநாயகர், “வாக்கு திருத்தம் 13 முறை நடந்ததற்கும் தற்போது நடக்கும் வாக்காளர் திருத்தத்திற்கும் வித்யாசம் உள்ளது” என்றார்.
தேர்தல் ஆணையம் சுதந்திரம் இழந்தது
“தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு. உச்சநீதிமன்ற நீதியரசர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையர்களால் அப்போது சிறப்பு திருத்தம் சிறப்பாக நடந்தது. இப்போது இருப்பவர் ஆணையர் அல்ல. பாரத பிரதமர் சொல்லும் ஆணையை ஏற்று நடத்தும் நிறுவனமாக தேர்தல் ஆணையம் மாறியுள்ளது. ஆகவே அதனை எதிர்க்கிறோம்” என்று கடுமையாக விமர்சித்தார்.
பீகார் தேர்தலில் பணம் வழங்கிய விவகாரம்
“உதாரணமாக பீகாரில் தேர்தலுக்கு முன்னால் 10 ஆயிரம் ரூபாய் அரசு நிதி பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த எதிர்ப்பும் சொல்லாமல் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது” என்று குற்றம்சாட்டினார்.
12 மாநிலங்களில் வாக்காளர் நீக்கம்
“அப்போது இறந்த வாக்காளர்கள் நீக்கம், புதிய வாக்காளர்கள் சேர்க்கை மற்றும் வாக்காளர்களில் இருக்கும் குளறுபடிகள் கடந்த காலத்தில் சரிசெய்யப்பட்டது. ஆனால் இப்போது வாக்காளர்களே இல்லாமல் ஆக்கி புதியதாக சேர்க்கும் நிலை 12 மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
EVM மென்பொருள் மோசடி குற்றச்சாட்டு
“தேர்தல் ஆணையம் புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவந்துள்ளது. எந்த பூத்தில் எவ்வளவு வாக்குகள் வேண்டுமானாலும் பதிவு செய்ய மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை இல்லையென்று அவர்கள் மறுக்கமாட்டார்கள்” என்று அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
படிவம் 17சி இணையதளத்தில் ஏற்ற மறுப்பு
“படிவம் 17சி உடனடியாக இணைய தளத்தில் ஏற்ற தேர்தல் ஆணையம் மறுக்கிறது. வாக்குபதிவு இயந்திரத்தில் வாக்களித்த அடுத்த நொடியே பதிவான வாக்குகள் எவ்வளவு என கண்டறிந்து விடலாம் ஆனால் அதனை செய்ய மறுக்கிறது” என்றார்.
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் கலந்தாலோசனை
“பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் ஆணையம் எத்தனை வாக்குகள் குறைவாக உள்ளது என்பதை கேட்டு குறைவான வாக்குகள் பதிவான இடங்களில் கூடுதல் வாக்குகளை பதிவு செய்து விடும். தேர்தல் ஆணையம் மோசடி ஆணையமாக செயல்படுகிறது. இதே போன்று பீகாரில் நடக்க வாய்ப்பு உள்ளது” என்று எச்சரித்தார்.
நிர்மலா சீத்தாராமன் குற்றச்சாட்டுக்கு பதிலடி
தமிழக திட்டங்களுக்கு நிதி நிறுத்தம்
ஒன்றிய அரசின் திட்டங்களை கொண்டுவருவதை தமிழக அரசு தடுப்பதாக நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளதற்கு பதிலளித்த அப்பாவு, “நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் காலத்தில் தான் சர்வசிக்ஷா அபியான் திட்டத்திற்கான நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, வெள்ள நிவரண நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று விமர்சித்தார்.
குஜராத்துக்கு 663 கோடி, தமிழகத்துக்கு இல்லை
“குஜராத்துக்கு விளையாட்டு துறைக்கு 663 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு விளையாட்டுக்கு போதிய நிதி வழங்கவில்லை. தமிழக அரசு ஒன்றிய அரசின் எந்த திட்டத்திற்கும் தடையாக இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.
குளத்தூர் தொகுதி போலி வாக்காளர் விவகாரம்
குளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் உள்ளதாக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, “மத்திய நிதி அமைச்சர் சொல்வதையெல்லாம் தமிழக மக்கள் நம்பவா வேண்டும்? நிதி அமைச்சரால் சுயமாக நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலையில் தான் உள்ளார்” என்று கேள்வி எழுப்பினார்.
எல்.முருகன் குற்றச்சாட்டுக்கு பதில்
தமிழகத்தில் அமைதி குலைந்துவிட்டதாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கூறியதற்கு பதில் அளித்த அவர், “தமிழகம் அமைதி பூங்காவாகத்தான் உள்ளது. டெல்லியில் தான் அமைதியின்மை உள்ளது. மக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
பாஜகவை எதிர்க்கவில்லை, நிதி கொடுக்காத மத்திய அரசை எதிர்க்கிறோம்
“தமிழக பாஜகவை நாங்கள் எதிர்க்கவில்லை. தமிழக திட்டங்களுக்கு நிதி கொடுக்காத மத்திய பாஜக அரசை தான் எதிர்க்கிறோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என நாங்கள் சொல்ல மாட்டோம். அப்படி சொல்பவர்கள் நாங்களும் அல்ல” என்று தெளிவுபடுத்தினார்.
ஸ்டாலின் 2.0 முதலமைச்சராக வருவார் – உறுதி
“எந்த சூழல் வந்தாலும் தமிழக வாக்காளர்கள் திமுக அரசுக்கு வாக்களிக்க தயாராக உள்ளார்கள். 2.0 முதலமைச்சராக மீண்டும் ஸ்டாலின் வருவார்” என்று உறுதியாக தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
“தேர்தல் ஆணையத்தின் சதியை முறியடிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர்
இந்த நிகழ்ச்சியில் அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், தடகள போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற எட்வினா ஜெய்சன், துணை மேயர் ராஜூ, கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணை தலைவர் இசக்கிப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







