
சென்னை : பிப்ரவரி 10, 2026;
வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட தமிழகத்தின் பழங்கால கலைப் பொக்கிஷங்களை மீட்பதில் தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரிய நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சுமார் அரை டன் எடையுள்ள பழங்கால கற்தூணை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. திருச்சி சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகனுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஆஸ்திரிய நாட்டின் சட்ட அமலாக்க முகமையான ‘பிந்தெஸ்கிரிமினாலமிட்’ (BUNDESKRINALAMT) வசம் ஒரு பழங்கால கற்தூண் இருப்பது தெரிய வந்தது. அந்த கற்தூணில் இந்திய நாட்டில் பெரும்பான்மை மக்கள் வழிபடும் கடவுளான விஷ்ணு, கருடர், முனிவர் மற்றும் அன்னப் பறவையின் புடைப்புச் சிற்பங்கள் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவின் காப்பாளர் ஸ்ரீராமன் ஆய்வு செய்தபோது, பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்தன ; அதன்படி..
- பொருள்: இந்த தூண் உயர்தர கிரானைட் கல்லால் ஆனது.
- காலம்:
இது கி.பி. 18 அல்லது 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். - பகுதி: இது வட தமிழகம் (தருமபுரி-கிருஷ்ணகிரி மண்டலம்), ஆந்திராவின் சித்தூர் அல்லது கர்நாடகாவின் கோலார் பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
- பயன்பாடு: கோவில்களில் உள்ள நந்தி மண்டபம் அல்லது சிறிய மண்டபங்களின் தூணாக இது இருந்திருக்க வாய்ப்புள்ளது.
கடத்தல் பின்னணி
இந்த கற்தூண் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது ‘அசாம் கோல்டு பிளை அண்ட் போர்டு, நார்த் இந்தியா’ என்று எழுதப்பட்டிருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. போலியான ஆவணங்களைத் தயாரித்து, சட்டவிரோதமாக இந்தத் தூண் இந்தியாவிலிருந்து ஆஸ்திரியாவிற்கு கடத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு மற்றும் மீட்புப்பணி
கடந்த 30.10.2025 அன்று இந்தத் தகவல் ஆஸ்திரிய அதிகாரிகளுக்கும், வியன்னாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் தலைமை இயக்குனர் கல்பனா நாயக் உத்தரவின்படி, வழக்கு எண் 01/2026-ன் கீழ் சட்டப்பிரிவுகள் 305, 336(2), 340(2) பி.என்.எஸ் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் உள்ள இந்த அரிய கற்தூணை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தமிழக போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
நாடு விட்டு நாடு கடத்தப்பட்ட நமது வரலாறு பேசும் சிற்பங்களை மீட்பதற்காக சிலை தடுப்பு பிரிவு போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் கவனத்தை பக்தர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.






