நவம்பர் 17 – 2025. தூத்துக்குடி :
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் அபாயம் நிலவுகிறது. இதனால் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தங்கியுள்ளனர். வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
வங்கக்கடலில் தாழ்வழுத்தம் உருவாகியுள்ளதால் தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மேலும், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதி உள்ளிட்ட வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருக்கின்றனர். சுமார் 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
தூத்துக்குடி, தருவைக்குளம், மணப்பாடு, அமலிநகர், இனிகோ நகர், புதிய துறைமுக கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான நாட்டுப்படகுகள் மற்றும் ஃபைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.






