
திருவண்ணாமலை பிப்ரவரி 15, 2026 ; பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகாசிவராத்திரி மற்றும் வார விடுமுறை என்பதால் இன்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று மகா சிவராத்திரி என்பதால், நேற்று இரவு முதலே தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர்.
இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ராஜகோபுரம் வழியாக தரிசனம் செய்யும் பக்தர்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக சென்று ரூ.50 கட்டண தரிசனத்தில் தரிசனம் செய்யும் பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து விட்டு திருமஞ்சன கோபுரம் வழியாக பக்தர்கள் வெளியே சென்று வருகின்றனர்.
சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களையும் வழிபட்டு நமச்சிவாய மந்திரத்தை ஜெபித்தபடி கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து இன்று இரவு அண்ணாமலையார் சன்னதிக்கு பின்புறம் உள்ள லிங்கோதபவ மூர்த்திக்கு இரண்டாம் கால வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.






